இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் சமீப காலமாக நிலவிய அரசியல் குழப்பத்துக்கு முடிவு கட்டும் விதமாக, ராஷ்டிரிய சுதந்திர கட்சியின் (Rastriya Swatantra Party - RSP) தலைவரான பாலேந்திர ஷா (பாலேன் என்று அழைக்கப்படுபவர்) இன்று நாட்டின் பிரதமராகப் பதவியேற்றார். 35 வயதே நிரம்பிய அவர், நேபாளத்தின் சமீப காலங்களில் மிக இளம் வயது பிரதமராகவும், முதல் மதேசி பின்னணியைச் சேர்ந்த தலைவராகவும் வரலாறு படைத்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நேபாளத்தில் ஊழல், குடும்ப அரசியல் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பிரச்சினைகளுக்கு எதிராக பெரும் போராட்டம் வெடித்தது. ஜென்-இசட் இளைஞர்கள் முன்னின்ற இந்தப் போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வன்முறை சம்பவங்கள் நாட்டை பெரும் அமைதியின்மைக்கு உள்ளாக்கியது.

இதனால் அப்போதைய பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒலியின் ராஜினாமாவுக்குப் பின், நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கும் பொறுப்பை ஏற்று, கடந்த செப்டம்பர் மாதம் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டார். அவர் சில மாதங்கள் நாட்டை நிர்வகித்து வந்த நிலையில், புதிய அரசைத் தேர்ந்தெடுக்கும் வகையில் மார்ச் 5 அன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.
இதையும் படிங்க: நேபாளத்தில் அதிரடி மாற்றம்! ஆர்.எஸ்.பி (RSP) கட்சியிடம் ஆட்சியை இழந்த மூத்த தலைவர்கள்!
இந்தத் தேர்தலில், முன்னாள் ராப்பர் மற்றும் காத்மாண்டு மேயராகப் பணியாற்றிய பாலேந்திர ஷாவின் ராஷ்டிரிய சுதந்திர கட்சி அமோக வெற்றி பெற்றது. 275 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் சுமார் 182 இடங்களை கைப்பற்றி, தனிப்பெரும்பான்மை பெற்றது. இந்த வெற்றி, நேபாள அரசியலில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வந்த பாரம்பரிய கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்களிடையே ஊழலுக்கு எதிரான உணர்வை வலுப்படுத்திய ஷாவின் தலைமை, மக்களின் பெரும் ஆதரவைப் பெற்றது.
இன்று காலை 12.34 மணிக்கு நேபாள ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஹிந்து சடங்குகள் மற்றும் பாரம்பரிய முறைப்படி பாலேந்திர ஷா பிரதமராகப் பதவியேற்றார். இந்த விழா எளிமையான முறையில், ஆனால் மரியாதைக்குரிய வகையில் நடைபெற்றது. புதிய பிரதமர், நாட்டில் ஊழலை ஒழிப்பது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவது, அரசியல் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பது உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாலேந்திர ஷாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ‘எக்ஸ்’ (முன்னர் ட்விட்டர்) தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “நேபாளத்தின் பிரதமராகப் பதவியேற்றுள்ள பாலேந்திர ஷாவுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகள். தேர்தலில் பெற்ற வெற்றி, நேபாள மக்கள் உங்கள் தலைமையின் மீது வைத்துள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. இரு நாட்டு மக்களின் பரஸ்பர நலனுக்காகவும், இந்தியா-நேபாள உறவுகளை மேலும் வலுப்படுத்தி, ஒத்துழைப்பை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லவும் உங்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற ஆவலுடன் இருக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
இந்த அரசியல் மாற்றம், நேபாளத்தின் எதிர்காலத்தில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்களின் ஆதரவுடன் உருவான இந்த அரசு, ஊழல் ஒழிப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுடனான உறவுகளையும் பலப்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க: மேற்கு ஆசிய நெருக்கடியும், எரிசக்தி பாதுகாப்பும்! இலங்கை ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி ஆலோசனை!