சென்னையின் கோயம்பேடு பழைய புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டம் குறித்து தமிழக அரசு ஆரம்பகட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் அரசு வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், சென்னை நகரின் எதிர்கால நிர்வாக கட்டமைப்பிலும் முக்கிய மாற்றம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.
கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் கடந்த 2002-ஆம் ஆண்டு சுமார் 36 ஏக்கர் பரப்பளவில் ரூ.103 கோடி செலவில் கட்டப்பட்டது. அங்கிருந்து புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டன. அதேபோல், அருகில் மாநகர பேருந்து நிலையமும் செயல்பட்டு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு போக்குவரத்து சேவையை வழங்கி வந்தது.
பின்னர் கிளாம்பாக்கத்தில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தின் பயன்பாடு குறைந்தது. இதையடுத்து, அந்த இடத்தில் வணிக வளாகம் மற்றும் பன்னோக்கு மையம் அமைக்கும் திட்டத்தை சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) பரிசீலித்து வந்தது.
இதையும் படிங்க: ஹை அலர்ட்! சென்னை, மதுரைக்கு வெப்பஅலை ஆபத்து!? ஆக்ஸ்போர்டு பல்கலை ஆய்வில் பகீர்!

ஆனால் தற்போது, அந்தத் திட்டத்துக்கு மாற்றாக புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் யோசனை அதிகாரிகள் மத்தியில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. தலைமைச் செயலக வளாகத்தில் தற்போது இடநெருக்கடி அதிகரித்திருப்பதுடன், அதிகாரிகள் மற்றும் அலுவலர்களின் வாகன நிறுத்த வசதியும் போதுமானதாக இல்லை. மேலும், சென்னை நகரின் மையப்பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசல் காரணமாக அலுவலகப் பணிகளிலும் தாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கோயம்பேடு பகுதியில் மெட்ரோ ரயில், மாநகர மற்றும் தொலைதூர பேருந்து இணைப்புகள் சிறப்பாக இருப்பதால், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எளிதாக வந்துசெல்ல முடியும் என்பதும் இந்தத் திட்டத்திற்கு சாதகமான அம்சமாகக் கருதப்படுகிறது. மேலும், அரும்பாக்கம், நெற்குன்றம், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பல மூத்த அதிகாரிகள் வசித்து வருவதாலும், நிர்வாக ரீதியாக இந்த இடம் வசதியானதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்திற்கு முதல்வரின் ஒப்புதல் கிடைத்தால், வரவிருக்கும் பட்ஜெட்டில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும், புதிய தலைமைச் செயலகத்தை அமைக்க சுமார் ரூ.350 கோடி வரை செலவாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இதுவரை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கடும் நிதி நெருக்கடியில் திணறும் சென்னை மாநகராட்சி! சம்பளம் போடவே திண்டாட்டம்!!