திமுக தலைவர்களிடம் எந்தவிதமான போலி பிம்பமும் உடையவில்லை என்றும், தங்களிடம் இருப்பது தூய்மையான உண்மையான உருவமும் ரத்தம் சிந்திய உண்மையான தியாக வரலாறு மட்டுமே என்றும், வரலாற்றை அறியாமல் பேசி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சருக்கும் அவரது சகாக்களுக்கும் திமுக மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா மிகக் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, சட்டப்பேரவையிலும் பொதுவெளியிலும் அவசரநிலை (எமர்ஜென்சி) மற்றும் மிசா சிறைவாசம் குறித்து தவெக முன்வைத்து வரும் தொடர் விமர்சனங்களுக்குத் தனது பாணியில் மிக விரிவான விளக்கங்களை முன்வைத்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அரசியல் வரலாற்றைத் துளியும் சரியாகப் படித்துத் தெரிந்து கொள்ளாமல் முதலமைச்சரும் அவருடைய சகாக்களும் மிசா சட்டத்தின் கீழ் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கைதாகவே இல்லை எனப் பச்சைப்பொய் பேசி வருகிறார்கள். இதற்கு மறுப்பு தெரிவித்து, உண்மை வரலாற்றை விளக்கி கழகத் தலைவர் ஸ்டாலின் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டால், பிம்பம் உடைந்துவிட்டதால் தான் அச்சத்தில் வீடியோ வெளியிடுகிறார் என்று தவெகவினர் அபத்தமாக விமர்சனம் செய்கிறார்கள். எங்களுக்கு எந்த பிம்பமும் உடையவில்லை; எங்களிடம் இருப்பது உண்மையான உருவம், மக்களுக்காகப் போராடி உருவான உண்மையான வரலாறு" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எம்ஜிஆர் காலத்திலேயே இடைத்தேர்தலில் வென்றோம்: மதுராந்தகம் தாராபுரத்தில் திமுக வெற்றி உறுதி - துரைமுருகன்!
தொடர்ந்து அவசரநிலைக் காலப் போராட்டங்களை நினைவுகூர்ந்த அவர், "இந்தியாவில் கொண்டுவரப்பட்ட எமர்ஜென்சியை நெஞ்சுறுதியோடு எதிர்த்து நின்ற ஒரே காரணத்திற்காகத் தங்களது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியையே இழந்த இயக்கம் தான் திமுக. அப்போது எமர்ஜென்சி கொண்டுவரப்பட்ட காலத்தில் இன்றைய முதலமைச்சருக்கு வயது வெறும் ஒன்று தான். நாம் சுதந்திரப் போராட்டத்தை நேரில் பார்த்தது கிடையாது; ஆனால் நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வீரர்களின் தியாகங்களை இன்றும் தொடர்ந்து பெருமையுடன் பேசுகிறோம் அல்லவா? அதேபோலத்தான் எமர்ஜென்சி காலகட்டமும் இந்தியாவின் ஜனநாயகத்தைக் காக்க நடத்தப்பட்ட மாபெரும் தியாகப் போராட்டமாகும்" என்று சுட்டிக்காட்டினார்.
மேலும் பேசிய அவர், "எமர்ஜென்சி குறித்து நாங்கள் எந்தப் பதற்றத்திலும் பேசவில்லை; தவெகவினர் பேசும் தரம் தாழ்ந்த பாணியில் அவர்களது வழியிலேயே பேச நாங்களும் விரும்பவில்லை, அது எங்களுக்குப் பழக்கமும் கிடையாது. இன்றைக்கு ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் வந்துவிட்டோம் என்கிற ஒரே மமதையில் வரலாற்றில் தடம் பதித்த மூத்த தலைவர்களின் தியாகங்களைக் கொச்சைப்படுத்துவது அரசியல் நாகரிகம் ஆகாது. எமர்ஜென்சி தியாக வரலாற்றை மீண்டும் தமிழ்நாட்டு மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்ததற்காகத் தவெகவினருக்கு நாங்கள் நன்றிதான் கூற வேண்டும். அவசரநிலைக் காலத்தில் இந்தியாவில் ஜனநாயகம் எவ்வாறெல்லாம் நசுக்கப்பட்டது என்பதை இன்றைய இளம் தலைமுறையினர் நன்கு அறிந்து கொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது" என்று குறிப்பிட்டார்.
பதவிக்காகவும் நாற்காலிக்காகவும் எதையும் செய்யலாம் என்கிற சந்தர்ப்பவாத அரசியல் உலகில், கொள்கைக்காகவும் ஜனநாயகத்தைக் காப்பதற்காகவும் பெரும்பான்மை பலத்தோடு இயங்கிக் கொண்டிருந்த தங்களது ஆட்சியையே தூக்கி எறிந்து தியாகம் செய்த இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் என்றும், திமுகவை விமர்சிப்பவர்கள் தங்களது அரசியல் அறியாமையை விட்டுவிட்டு அந்த வரலாற்றுப் பக்கங்களை முதலில் படித்துப் பார்க்க வேண்டும் என்றும் திருச்சி சிவா ஆணித்தரமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சூடுபிடித்த இடைத்தேர்தல் களம்.. யார் இந்த பரந்தாமன், சுகன்யா? வேட்பாளர்களின் முழு பின்னணி இதோ!!