பழனி கோவில் நிலத்துக்கு அடுத்து ரூ.2 கோடி கோவில் நிலம் மோசடி! மீண்டும் அதே கும்பல் கைவரிசை?
சென்னை: திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமான ரூ.108 கோடி மதிப்புள்ள நிலம் முறைகேடாக பதிவு செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதே மாவட்டத்தில் மற்றொரு கோவிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்புள்ள நிலமும் முறைகேடாக பதிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
பழனி கோவில் கட்டுப்பாட்டில் உள்ள தண்டபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமான நிலம் போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. அந்த பதிவு ரத்து செய்யப்பட்டதுடன், சார் பதிவாளர் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், பழனியை அடுத்த ஆயக்குடியில் உள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 2.40 ஏக்கர் நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிலத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.2 கோடி என அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பழனி கோயில் நில மோசடி வழக்கு! நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருந்த நேரத்தில் திடீர் நெஞ்சுவலி! பரபரப்பு!
தண்டபாணி சுவாமி மடம் நிலம் பதிவு செய்யப்பட்ட மறுநாளே, இந்த நிலமும் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், கோவில் நிலம் தொடர்பாக ஏற்கனவே அறநிலையத்துறை அதிகாரிகள் பதிவுத்துறைக்கு மனு அளித்திருந்தும், அதன்பிறகு பத்திரப்பதிவு நடந்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவில் சொத்துகளை போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்யும் முயற்சிகள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும், பதிவுத்துறையில் இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையே, மதுரை மீனாட்சியம்மன் கோவில் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை தனியார் பெயர்களுக்கு மாற்றி பதிவு செய்ய முயன்ற விவகாரத்தில் 19 பேர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
கோவில் அறக்கட்டளைகளுக்கு சொந்தமான நிலங்கள், குறிப்பிட்ட தர்ம காரியங்களுக்காக முன்னோர்களால் வழங்கப்பட்டவை என்றும், அவற்றை மறைத்து நீதிமன்ற நடவடிக்கைகள் மூலமாகவும் பத்திரப்பதிவு செய்ய முயற்சிகள் நடைபெறுவதாகவும் அமைச்சர் கூறினார்.
பழனி கோவில் நில விவகாரத்தில் பல்வேறு சட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு நிலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கோவில் மற்றும் அறக்கட்டளை சொத்துகளை பாதுகாக்க அறநிலையத்துறை தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
இதற்கிடையே, கோவில்களில் VIP மற்றும் பிரபலங்களின் தரிசனம் தொடர்பாகவும் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன. செப்டம்பர் 1 முதல் முதல் நிலை கோவில்களில் பக்தர்கள் மொபைல் போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இதற்காக கோவில் வளாகங்களில் பாதுகாப்பான மொபைல் போன் வைப்பிட வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
மேலும், அமைச்சர்கள் மற்றும் பிரபலங்கள் கோவிலுக்கு வரும் போது, அவர்களின் தரிசனத்தை கோவிலுக்குள் வீடியோ பதிவு செய்வதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: பழனி நில விவகாரத்தில் அப்பட்டமாக மீறப்பட்ட சட்ட விதிகள்! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!