தமிழக அரசியலின் மூத்தத் தலைவர்களில் ஒருவரும், ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் ஆலோசகருமான பண்ருட்டி ராமச்சந்திரன், தற்போது ஓபிஎஸ் அணியிலிருந்து அதிரடியாக விலகியுள்ளார். நீண்ட நாட்களாக ஓபிஎஸ் நடத்தி வந்த 'அதிமுக உரிமை மீட்புக் கழகத்தின்' ஆலோசகராகச் செயல்பட்டு வந்த அவர், தற்போது 'எம்.ஜி.ஆர். அண்ணா திமுக' என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி செய்தியாளர் சந்திப்பு வாயிலாக அவர் வெளியிட உள்ளார்.
பண்ருட்டி ராமச்சந்திரனின் தனது அரசியல் பயணத்தைத் திமுகவில் தொடங்கினார். 1967 மற்றும் 1971 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வானார். 1977-ல் எம்ஜிஆர் முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். எம்ஜிஆர் மறைவிற்குப் பிறகு நிலவிய அரசியல் குழப்பத்தில் ஜெயலலிதா அணிக்கு ஆதரவு தெரிவித்தார். பின்னர் ஜெயலலிதாவுக்கு எதிராக நாவலர் நெடுஞ்செழியனுடன் இணைந்து 'நால்வர் அணி'யை உருவாக்கினார்.
1991-ல் பாமகவில் இணைந்து எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து விலகி 'தமிழக மக்கள் நலக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கி 1997-ல் திமுகவுடன் கூட்டணி அமைத்தார். தேமுதிக முதல் மீண்டும் அதிமுக வரை: 2005-ல் விஜயகாந்தின் தேமுதிகவில் இணைந்தார். மீண்டும் 2014-ல் அதிமுகவில் ஐக்கியமானார். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு சசிகலாவுக்கு ஆதரவு அளித்த அவர், அதிமுகவில் இபிஎஸ் - ஓபிஎஸ் பிளவு ஏற்பட்டபோது ஓபிஎஸ் பக்கமே நின்றார். தற்போது ஓபிஎஸ் அணியிலிருந்து விலகித் தனிக்கட்சி தொடங்கியுள்ள அவரது முடிவு, தமிழக அரசியலில் குறிப்பாக 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தை முடிய 9 நாள் பாக்கி!! முடிவை சொல்லுவாரா ஓ.பி.எஸ்! தவெகவா? தனிக்கட்சியா? திமுகவில் ஐக்கியமா?
இதையும் படிங்க: "அதிமுக ஒரு எஃகு கோட்டை!" கட்சியில் துரோகிகளுக்கு இடமில்லை என செல்லூர் ராஜு மீண்டும் உறுதி...!