கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக பேசினார். மேற்காசியாவில் தற்போது நிலவும் போர் மற்றும் பதற்ற சூழலை குறிப்பிட்ட அவர், லட்சக்கணக்கான இந்தியர்கள் அங்கு பணியாற்றி வருவதால் அனைவருக்கும் கவலை ஏற்பட்டுள்ளது என்றார். ஆனால், மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருப்பதால், நமது குடிமக்களை பாதுகாக்க அனைத்து சக்திகளையும் பயன்படுத்தி வருவதாக உறுதியளித்தார்.
“இன்றைய இந்தியா, தன் மக்களை எந்த பிரச்னையிலும் தள்ளிவிடாது. போரில் சிக்கிய இந்தியர்களுக்கு அனைத்து பாதுகாப்பு வசதிகளும், உணவு, தங்குமிடம், மருத்துவம் உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்பட்டு வருகிறது. வளைகுடா நாடுகளில் உள்ள நமது நட்பு நாடுகளும் இதில் ஒத்துழைப்பு அளித்து வருகின்றன. நமது தூதரகங்கள் 24 மணி நேரமும் எங்கள் மக்களுக்கு உதவி செய்து வருகின்றன” என்று பிரதமர் விளக்கினார்.

இதனிடையே, காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். “உலகளாவிய பிரச்னை ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் காங்கிரஸ் அரசியல் செய்வது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. வேண்டுமென்றே ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிட்டு, இடையூறு ஏற்படுத்த முயல்கின்றனர். இதனால் நமது மக்கள் அங்கு சிக்கிக் கொள்வார்கள். பின்னர் மோடியை திட்டுவார்கள். இதுதான் அவர்களின் திட்டம்” என்று குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: நாட்டின் நலனில் மோடி சமரசம்?! பார்லி.,யில் அனல் பறக்கும் விவாதம்!! ராகுல்காந்திக்கு ரவிசங்கர் பிரசாத் பதிலடி!
கேரள மக்களிடம் திரும்பி பேசிய பிரதமர், “70 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுக்கு வாய்ப்பு கொடுத்தீர்கள். இப்போது பாஜக தலைமையிலான NDA கூட்டணிக்கு வாய்ப்பு கொடுங்கள். வளர்ச்சி அடைந்த கேரளத்தை நீங்கள் காண்பீர்கள்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
போர் காரணமாக வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்தியர்களின் பாதுகாப்பு, அவர்களின் குடும்பங்களின் கவலை ஆகியவை தற்போது மிகப்பெரிய பேசுபொருளாக உள்ளன. இந்நிலையில் பிரதமரின் இந்த கூட்டம் கேரளாவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மக்களின் பாதுகாப்பு மற்றும் கட்சி அரசியல் குறித்து அவர் வைத்த விளக்கம், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மக்களுக்கு நமஸ்காரம்!! கொச்சியில் ஸ்கோர் செய்த மோடி!! கேரளம் என பெயர் மாற்றிய தருணம்?! பிரதமர் நெகிழ்ச்சி!