கன்னியாகுமரி மாவட்டம் லட்சுமிபுரத்தில் நேற்று தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழகத்தின் வளர்ச்சியில் அதிமுகவுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு என்று பேசியது திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லட்சுமிபுரத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ராகுல் பேசுகையில், “தமிழகத்தின் வளர்ச்சியில் அதிமுகவுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. ஒரு காலத்தில் அதிமுக தலைவர்கள் தமிழகத்தின் பிரதிநிதிகளாக இருந்தனர்.
ஆனால் இப்போது அதிமுக வெற்றுக் கூடாரமாக மாறிவிட்டது. பாஜகவுக்கு தமிழகத்துக்குள் நுழைய உதவும் கருவியாக அதிமுக மாறியுள்ளது. இபிஎஸ்-ஐ ஆட்டுவிக்க பிரதமர் மோடி முயற்சி செய்கிறார். அதிமுக தலைவர்கள் பாஜகவிடம் சரணடைந்து விட்டனர்” என்று கூறினார்.
இதையும் படிங்க: குழந்தைதனமா இல்லையா? சாக்கு சொல்லி சிக்கிய செல்வப்பெருந்தகை! விளாசும் அண்ணாமலை!
ராகுல் மேலும் பேசுகையில், “ஒரு மொழி, ஒரு கலாசாரம் என்ற ஒற்றை அரசியலை பாஜக திணிக்க முயல்கிறது. தமிழ் மொழியின் பல்லாயிரம் ஆண்டு வரலாற்றை பாஜக அழிக்க முயல்கிறது. தமிழகத்தை தமிழர்களே ஆள வேண்டும் என்று நாங்கள் உறுதியாக நிற்கிறோம். தமிழ், தமிழர்களின் பண்பாடு, கலாசாரம் மற்றும் உரிமைகளை பாதுகாப்பதில் திமுக-காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளது” என்றார்.

மணிப்பூர் மாநிலத்தில் பாஜகவால் அமைதி சீர்குலைந்ததாகவும், தொகுதி மறுவரையறை மசோதாவை தோற்கடித்ததாகவும் ராகுல் சுட்டிக்காட்டினார். தமிழகத்தில் திமுக அரசு கொண்டு வந்த காலை உணவுத் திட்டம், மதிய உணவுத் திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்களை பாராட்டிய அவர், இந்தத் திட்டங்கள் தொடரும் என்றும் உறுதியளித்தார்.
ராகுலின் பேச்சில் “தமிழக வளர்ச்சியில் அதிமுகவுக்கு பெரிய பங்கு” என்ற வரி இடம் பெற்றதால் திமுகவினர் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துள்ளனர். கூட்டணிக் கட்சியின் தலைவர் அதிமுகவை பாராட்டியது திமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் பிரசாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ராகுலின் இந்தப் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "இந்தியாவையே அமெரிக்காவிடம் விற்ற பிரதமர் மோடி"..! ராகுல் காந்தி சரமாரி குற்றச்சாட்டு..!