தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றபோது, அவரது பேச்சின் மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட குளறுபடி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குளறுபடிக்கு தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் நிவேதித் ஆல்வா தான் காரணம் என்று கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ராகுல் காந்தி சோளிங்கர் உள்ளிட்ட ஆறு தொகுதிகளில் மட்டுமே பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்றார். அப்போது அவரது பேச்சை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மொழிபெயர்த்தபோது, பல தவறுகள் நிகழ்ந்தன. இது கேலிக்கும், விமர்சனத்துக்கும் உள்ளானது.
காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் கூறுகையில், “ராகுலின் பேச்சுகளை வழக்கமாக சிறப்பாக மொழிபெயர்க்கும் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸை வேண்டுமென்றே ஒதுக்கி வைத்துவிட்டனர். லோக்சபா தேர்தலின்போது ராகுல் அவரை ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று மொழிபெயர்ப்பு செய்ய வைத்தார். ஆனால் இந்த முறை பீட்டர் அல்போன்ஸை ஒதுக்கி, எதிர் அணியினர் சூழ்ச்சி செய்துள்ளனர். ‘வயதாகிவிட்டது, காது கேட்கவில்லை’ என்று பொய்யான காரணத்தைச் சொல்லி அவரை ஒதுக்கியதாகக் கூறப்படுகிறது” என்றனர்.
இதையும் படிங்க: பா.சிதம்பரம் புறக்கணிப்பு!! கண்டுகொள்ளாத கோவை காங்., வேட்பாளர்கள்! உள்கட்சி விரிசல்!

இதில் நிவேதித் ஆல்வாவின் உதவியுடன் பீட்டர் அல்போன்ஸை தடுத்து நிறுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொன்னேரியில் அலிம் அல் புகாரி, சோளிங்கரில் செல்வப்பெருந்தகை, துறையூரில் சொர்ணா சேதுராமன் ஆகியோர் மொழிபெயர்ப்பாளர்களாக செயல்பட்டனர். இதில் சோளிங்கர் பிரசாரத்தில் செல்வப்பெருந்தகையின் மொழிபெயர்ப்பு மிகவும் சொதப்பியது.
இந்தச் சர்ச்சைக்குப் பிறகு, ராகுலின் உதவியாளர் அலங்கார், பீட்டர் அல்போன்ஸை நேரடியாகத் தொடர்பு கொண்டு, குளச்சல் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளில் மொழிபெயர்ப்பாளராக பங்கேற்குமாறு கேட்டுக் கொண்டார். பீட்டர் அல்போன்ஸ் அதை ஏற்றுக்கொண்டதால், ராகுல் தனது ஹெலிகாப்டரில் அவரை அழைத்துச் சென்றார். நாங்குநேரியில் ஜோதிமணி எம்.பி. மொழிபெயர்ப்பு செய்தார்.
தமிழக காங்கிரஸில் இந்த மொழிபெயர்ப்பு விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகுலின் பிரசாரத்தை மிகச் சிறப்பாக மொழிபெயர்க்கும் திறன் கொண்ட பீட்டர் அல்போன்ஸை ஒதுக்கியது யாருடைய சூழ்ச்சி என்பது கட்சிக்குள் பெரும் விவாதமாக மாறியுள்ளது.
இந்தச் சம்பவம் தமிழக காங்கிரஸின் உள்ளூர் அரசியலையும், கோஷ்டிப் போட்டிகளையும் மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
இதையும் படிங்க: டெல்லியா? தமிழ்நாடா? காங்., வேட்பாளர் தேர்வில் குடுமிப்பிடி சண்டை! கட்சிக்குள் நடக்கும் குழப்பம்!