பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் மகளும், கட்சியின் முன்னாள் செயல் தலைவருமான காந்திமதி பரசுராமன் மற்றும் அவரது மகன், பாமக இளைஞரணி முன்னாள் தலைவர் முகுந்தன் பரசுராமன் ஆகியோர் விரைவில் என்.ஆர். காங்கிரஸில் இணையலாம் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னோட்டமாக இருவரும் புதுச்சேரி முதல்வரும், என்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமியை நேரில் சந்தித்தது முக்கிய அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது.
புதுச்சேரியில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, முதல்வர் ரங்கசாமி காந்திமதி மற்றும் முகுந்தனுக்கு திருநீறு பூசி வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின் புகைப்படங்கள் வெளியாகியதும், இருவரின் அடுத்த அரசியல் பயணம் குறித்து பல்வேறு யூகங்கள் எழுந்துள்ளன.
என்.ஆர். காங்கிரஸ் வட்டாரங்களில் இருந்து வெளியாகியுள்ள தகவலின்படி, தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக காந்திமதி மற்றும் முகுந்தனுடன் முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பாமக முன்னாள் நிர்வாகிகள் பலரும் இவர்களுடன் இணைந்து என்.ஆர். காங்கிரஸில் சேரக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: #BREAKING: “அரசியலில் இருந்து விலகுகிறேன்”..! பாமகவில் தலைமுறை மாற்றம்.. ராமதாஸ் அதிரடி அறிவிப்பு..!!

இந்த விவகாரம் குறித்து முகுந்தனிடம் கேட்கப்பட்டபோது, "விரைவில் நல்ல செய்தி வரும்" என்று மட்டும் கூறியுள்ளார். மேலும், "நாங்கள் ராமதாஸை நேரில் சந்தித்து, இனி எங்கள் குடும்பம் பாமகவுடன் தொடர்பில் இருக்காது என்று தெரிவித்துவிட்டோம். அழைப்பு வந்தாலும் கட்சிக்குச் செல்ல மாட்டோம்; பேசவும் மாட்டோம்" என்று அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், பாமக முன்னாள் எம்.எல்.ஏ. அருளும் சமீபத்தில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்திருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகக் கருதப்படுகிறது. இதனால், பாமக முன்னாள் நிர்வாகிகளின் ஒரு பகுதி புதிய அரசியல் தளத்தை நோக்கி நகர்கிறார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஏற்கெனவே ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக கட்சிக்குள் நீண்டகாலமாக அதிகாரப் போட்டி நிலவி வந்தது. பின்னர் இரு தரப்பும் இணைந்ததாக கூறப்பட்டாலும், தற்போது ராமதாஸின் மகளும், அவரது ஆதரவாளர்களும் பாமகவிலிருந்து விலகும் சூழல் உருவாகியுள்ளதாக கூறப்படுவது மீண்டும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், காந்திமதி மற்றும் முகுந்தன் என்.ஆர். காங்கிரஸில் அதிகாரப்பூர்வமாக இணைவது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதையும் படிங்க: பொம்மை ஆணையத்தால் பயனில்லை! காவிரி விவகாரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!