சிக்கிம் மாநிலம் உருவாக்கப்பட்டதன் 50-வது ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, மாநில மக்களுக்கு உற்சாகமான செய்திகளை வழங்கினார். கேங்டாக்கில் உள்ள பல்ஜோர் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளை ரசித்த பிரதமர், ரூ.4,000 கோடி மதிப்பிலான பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் மற்றும் தொடங்கி வைத்தார்.
பின்னர் பேசிய பிரதமர் மோடி, “சிக்கிம் கிழக்கின் சொர்க்கம். இது ஆர்க்கிட் மலர்களின் தோட்டம். ஆர்க்கிட் மலர்களைப் பார்க்காவிட்டால் உண்மையான அழகை நீங்கள் அனுபவிக்கவில்லை என்று அர்த்தம்” என்று உணர்ச்சிபூர்வமாகக் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது: “சிக்கிமின் வண்ணங்கள் தனித்துவமானவை. இங்கு அழகு, அமைதி மற்றும் பேரின்பம் நிறைந்துள்ளது. ஒரே இந்தியா என்ற பார்வையை சிக்கிம் கொண்டுள்ளது. சாதி, மத பாகுபாடுகளை உருவாக்க முயற்சிகள் நடக்கும் போது, சிக்கிம் மக்கள் ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற தொலைநோக்குப் பார்வையை உலகுக்கு நிரூபித்துக் காட்டியுள்ளனர். இதுவே உண்மையான தேசபக்தி” என்றார்.
இதையும் படிங்க: மேற்கு வங்கம் சட்டசபைத் தேர்தல்: உற்சாகமான முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு பிறகு நாளை இறுதிக் கட்டம்..!!

காங்கிரஸ் ஆட்சியின் போது சிக்கிமின் வளர்ச்சித் திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகள் வேகம் பெற்றதாகவும் பிரதமர் விமர்சித்தார். “சிவோக்-ரங்போ ரயில் பாதை திட்டம் 2008-09ல் அனுமதி பெற்றும், காங்கிரஸ் ஆட்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இப்போது முதல் முறையாக சிக்கிமுக்கு ரயில் பாதை அமைய உள்ளது” என்று தெரிவித்தார்.
பிரதமரின் இந்தப் பயணம் சிக்கிம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 50-வது ஆண்டு நிறைவு விழாவை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
சிக்கிம் மாநிலம் இந்தியாவின் ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவதாக பிரதமர் மோடி பாராட்டினார். மாநில மக்களின் தேசபக்தியைப் புகழ்ந்த அவர், புதிய தலைமுறையினரிடம் தேசபக்தி உணர்வை வளர்க்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: முதல்வர் மு.க.ஸ்டாலின் பாதுகாப்பில் போதை போலீசார்?! மதுபோதையில் இருந்த 3 பேர் தூக்கியடிப்பு!