தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முதல்வர் விஜய் அறிமுகப்படுத்தியுள்ள ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதுடன், அவசர சூழ்நிலைகளில் உடனடி பாதுகாப்பு வழங்கும் வகையில் இந்த புதிய காவல் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
பெண்களின் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதி செய்யும் நோக்கில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக சுமார் ரூ.354 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 2,500 புதிய பணியிடங்களும் உருவாக்கப்பட உள்ளன. மாநிலம் முழுவதும் 270 சிங்கப்பெண் அதிரடிப்படை பிரிவுகள் அமைக்கப்படும் நிலையில், முதற்கட்டமாக 70 பிரிவுகள் இன்று முதல் களப்பணியை தொடங்கியுள்ளன.
இந்த சிறப்பு படையின் தலைவராக ஐ.ஜி. பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையரகங்களில் தலா நான்கு சிங்கப்பெண் படைகள் செயல்படும். மற்ற காவல் ஆணையரகங்களில் தலா இரண்டு பிரிவுகள் பணியாற்றும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'சிறப்பு அதிரடிப்படை' திட்டத்தை நிறுத்திவைத்துள்ளது ஏன்? தவெக அரசுக்கு கனிமொழி எம்.பி சரமாரி கேள்வி!

ஒவ்வொரு குழுவிலும் இரண்டு பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஒரு பெண் காவலர் இடம்பெறுவார்கள். இதற்காக 140 பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன், 420 பெண் காவலர்களும் இந்த சிறப்பு பிரிவில் பணியாற்ற உள்ளனர். சுழற்சி முறையில் 24 மணி நேரமும் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த படைக்கு தேவையான நவீன வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, நான்கு சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், பாடி வார்ன் கேமராக்கள் மற்றும் பிரத்யேக சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. சில தொழில்நுட்ப மற்றும் உதவி பணிகளுக்காக ஆண் காவலர்களும் துணை நிற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் நேரடியாக சிங்கப்பெண் அதிரடிப்படையை தொடர்புகொள்ளும் வகையில் தனிப்பட்ட வாட்ஸ்அப் எண்கள் மற்றும் செல்போன் வசதிகள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அதுவரை அவசர உதவிக்காக காவல்துறையின் 100 என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணை பயன்படுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெண்களின் பாதுகாப்பை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய முயற்சி, மாநிலம் முழுவதும் பாதுகாப்பு உணர்வை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 23 பெண்களின் நிர்வாண விடியோ! திருவண்ணாமலை கும்பல் அரங்கேற்றிய கொடூரம்! விசாரணையில் பகீர்!