புதுடில்லி: நாட்டில் அண்மைக்காலமாக சர்க்கரை விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதற்கான காரணம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. எத்தனால் உற்பத்திக்காக அதிக அளவில் கரும்பு பயன்படுத்தப்படுவதால்தான் சர்க்கரை விலை உயர்ந்துள்ளதாக கூறப்படும் தகவலில் உண்மையில்லை என மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களில் சர்க்கரை, வெல்லம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, சர்க்கரை விலை ஒரு கிலோ ரூ.48 என்ற அளவில் இருந்து ரூ.67 வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெல்லத்தின் விலையும் ரூ.50-ல் இருந்து ரூ.65 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் அரிசி மற்றும் சோள மாவு விலையும் முறையே 16 சதவீதம் மற்றும் 11 சதவீதம் அதிகரித்துள்ளன. கால்நடை தீவனங்களின் விலையும் 10.34 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வை சுட்டிக்காட்டிய காங்கிரஸ், எத்தனால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு மேற்கொண்ட கொள்கைகளே சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என குற்றம்சாட்டியது.
இதையும் படிங்க: இந்தியாவின் எத்தனால் பயன்பாட்டில் புதிய சாதனை! 800 கோடி லிட்டரை தாண்டியது வினியோகம்!

குறிப்பாக, சர்க்கரை உற்பத்திக்கு பயன்படுத்த வேண்டிய கரும்பில் ஒரு பகுதி எத்தனால் தயாரிப்புக்கு திருப்பிவிடப்பட்டுள்ளதாகவும் அக்கட்சி தெரிவித்தது.
இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. தற்போது நாட்டில் தயாரிக்கப்படும் எத்தனாலில் சுமார் நான்கில் மூன்று பங்கு தானியங்கள், குறிப்பாக சோளத்திலிருந்தே தயாரிக்கப்படுவதாக அமைச்சகம் கூறியுள்ளது. கடந்த 2022-23ல் எத்தனால் உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட கரும்பின் அளவு 12 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது அது 9 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதனால், கரும்பு எத்தனால் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுவதே சர்க்கரை விலை உயர்வுக்கான முக்கிய காரணம் என கூறுவது சரியல்ல என மத்திய அரசு தெரிவித்துள்ளது. உள்நாட்டு சர்க்கரை உற்பத்தி குறைவு, அதிகரித்த தேவை, சர்க்கரை பதுக்கல் மற்றும் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள விநியோக பாதிப்புகள் உள்ளிட்ட பல காரணிகள் ஒன்றாக இணைந்ததே விலை உயர்வுக்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், சர்க்கரை விலை உயர்வை மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், போதுமான கையிருப்பு இருப்பதை உறுதி செய்து, விலையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: லண்டனில் இருக்கும் ரேவந்த் ரெட்டி அமெரிக்கா செல்ல தடை? மத்திய அரசு அனுமதி மறுத்ததால் பரபரப்பு!