சென்னை: தமிழகத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகளின் பட்டியலை கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தங்களுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதா என்பதை விவசாயிகள் எளிதாக சரிபார்த்துக் கொள்ளலாம்.
தமிழகத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு, கடந்த 2025-ம் ஆண்டு மே மாதம் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இதன்படி, மொத்தம் 14.43 லட்சம் விவசாயிகளின் ரூ.5,932 கோடி மதிப்பிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 'எம்.ஜி.ஆர் தொடங்கிய துறை அடையாளத்தை இழக்கிறது'... முதல்வர் விஜய்க்கு அலுவலர்கள் அவசர கோரிக்கை
பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகளின் பெயர், மாவட்ட வாரியான விவரங்கள் மற்றும் ஒவ்வொரு விவசாயிக்கும் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை உள்ளிட்ட தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதனால் பயனாளிகள் தங்களது பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதை சரிபார்க்க முடியும்.

மேலும், மாவட்டம் வாரியாக வெளியிடப்பட்டுள்ள பயனாளிகள் பட்டியல், அந்தந்த பகுதிகளில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) அலுவலகங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகங்களிலும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இணையம் மூலம் விவரங்களை சரிபார்க்க விரும்பும் விவசாயிகள், தமிழக கூட்டுறவுத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலை பார்க்கலாம். இணையதளத்தில் மாவட்ட வாரியாக பயனாளிகள் மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகை தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
பயிர்க்கடன் பெற்றிருந்த விவசாயிகள், தங்களது பெயர், கடன் விவரம் மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை ஆகியவற்றை சரிபார்த்துக் கொள்வது முக்கியம். பட்டியலில் பெயர் இடம்பெறவில்லை என்றால், சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை அணுகி தங்களது கடன் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.
இந்த அறிவிப்பு, கடன் சுமையில் உள்ள விவசாயிகளுக்கு முக்கியமான தகவலாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக 14 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ.5,932 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், பயனாளிகள் பட்டியலை சரிபார்ப்பதில் ஆர்வம் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: குட் நியூஸ்! வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்? அமைச்சர் வினோத் சொன்ன முக்கிய அறிவிப்புகள்!