வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் 2026 தேர்தலில் தமிழகத்தில் நடத்தப்படும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "இந்தியா சுதந்திரம் அடைந்தபோது ஏற்பட்ட சந்தோஷத்தைவிட, இன்று அடைந்த சந்தோஷம் மிகவும் மகிழ்ச்சியான நாளாக அமைந்துள்ளது. காஷ்மீரில் பயங்கரவாத சம்பவத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியர்களின் ஆன்மா இப்போது சாந்தி அடையும். பிரதமர் மோடி தனி நபர் அல்ல. அவர் 140 கோடி இந்தியர்களின் சிகரமாக விளங்கி வருகிறார்.

பாகிஸ்தானிலும் காஷ்மீர் ஆக்கிரமிப்பு பாகிஸ்தானிலும் 9 இடங்களில் உள்ள தீவிரவாதிகளின் இடங்களை குறிவைத்து ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்காக தமிழக பாஜக சார்பில் பிரதமர் மோடிக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் முதல்வராக இருக்கக்கூடிய ரேவந்த் ரெட்டி, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று கூறியதற்காகவும், தேச ஒற்றுமை பிரச்சினை குறித்து தமிழக முதல்வர் வரவேற்று பேசியதற்கும் என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட எந்த கட்சியாக இருந்தாலும் தேச உணர்வு இருக்க வேண்டும். வரும் 2026ஆம் ஆண்டில் தமிழக சட்டப் பேரவை தேர்தலில் வெற்றிவேல் வீரவேல் எனும் ஆபரேஷனை நாங்கள் தொடங்குவோம். பாஜக கூட்டணிக்கு வருமாறு விசிக தலைவர் திருமாவளவனுக்கு நான் அழைப்பு விடுக்கவில்லை. அவர் என்னுடைய நெருங்கிய நண்பர்தான். மற்றவர்கள் யாரும் பேசினார்களா என்று எனக்குத் தெரியவில்லை. நீட் தேர்வு எழுதும் மாணவிகளை தலைவிரி கோலமாக அனுப்புவதெல்லாம் தேவையில்லாத ஒன்று,” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: புதிதாக வருபவர்கள் முதல்வராக முடியாதா.? உதயநிதி மட்டும் முதல்வராக முடியுமா.? தமிழிசை பொளேர்!
இதையும் படிங்க: நாகரீக சமூகத்தில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை...டிகேஎஸ் இளங்கோவன் ஆவேசம்!