VIP தரிசனத்துக்கு செக் வைத்த அமைச்சர்... இனி அரசியல்வாதிகளுக்கும் அதே கட்டுப்பாடா?
சென்னை: தமிழகத்தில் முக்கிய கோவில்களில் பிரபலங்கள் மற்றும் VIP-க்களின் தரிசனத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதே நடைமுறை அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கும் பொருந்த வேண்டும் என பக்தர்கள் தரப்பில் கோரிக்கை வலுத்துள்ளது.
ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய கோவில்களில் பக்தர்களின் தரிசனத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில், VIP-க்கள் மற்றும் திரை பிரபலங்களின் தரிசனத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் கோவிலுக்குள் மொபைல் போன் எடுத்துச் செல்வது, புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது உள்ளிட்டவற்றுக்கும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் அறிவுறுத்தலின் அடிப்படையில், துறை கமிஷனர் வினய், இணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் மற்றும் செயல் அலுவலர்களுக்கு இதுதொடர்பான சுற்றறிக்கையை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் ஆன்மிக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கோவில் நிலங்களை குறிவைக்கும் மோசடி கும்பல்? இதுவரை 19 பேர் கைது! அமைச்சர் ரமேஷ் பரபரப்பு தகவல்!
அதேநேரத்தில், கோவில்களில் VIP கலாசாரத்தை முழுமையாக கட்டுப்படுத்த மேலும் சில உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பல கோவில்களில் கட்டணம் செலுத்தி நீண்ட நேரம் காத்திருக்கும் பக்தர்கள், அதே நேரத்தில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் குழுவாக வந்து காத்திருக்காமல் தரிசனம் செய்வதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், சில இடங்களில் அரசியல் பிரமுகர்களுக்கு பூரண கும்ப மரியாதை, மேளதாளம் மற்றும் நாதஸ்வரத்துடன் வரவேற்பு அளிப்பதாகவும், இது கோவில் வழிபாட்டு நடைமுறையுடன் தொடர்புடையதா அல்லது VIP மரியாதையா என்ற கேள்வியை எழுப்புவதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர்.
காவல் துறையினருக்கும் இதுபோன்ற சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக திருவிழா மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் அதிகாரிகளின் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட பலர் சிறப்பு தரிசனத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும், கோவில் நிர்வாகங்களுக்கு நெருக்கடி ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
எனவே, அரசியல்வாதிகள் மட்டுமின்றி காவல் துறை, நீதித்துறை, தலைமைச் செயலகம் உள்ளிட்ட அனைத்து அரசு துறையினருக்கும் ஒரே மாதிரியான தரிசன விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கட்டணம் செலுத்தாமல் சிறப்பு தரிசனம் பெற முயற்சிப்பவர்கள் யாராக இருந்தாலும், கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்க வேண்டும் என்றும் கோரப்படுகிறது. VIP கலாசாரத்துக்கு பதிலாக அனைத்து பக்தர்களுக்கும் சமமான தரிசன வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே இந்த கோரிக்கையின் முக்கிய நோக்கமாக உள்ளது.
இதையும் படிங்க: கோயில்களில் VIP கலாசாரத்திற்கு செக்? அமைச்சர், எம்எல்ஏக்களுக்கும் கட்டுப்பாடு! போட்டோ, வீடியோ எடுக்க தடை!