தமிழக வெற்றிக் கழக தலைமையிலான அரசின் முதல் முழுமையான பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். நாளை வேளாண் பட்ஜெட்டை வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்யவுள்ளார்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், தலைமைச் செயலகத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பட்ஜெட் தொடர்பாக கடந்த ஒரு மாத காலமாக தமிழக முதலமைச்சர் விஜய், ஒவ்வொரு துறையினருடனும் தனித்தனியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, எந்தெந்த திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும் என்பது குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டார். அந்த ஆலோசனைகளின் வெளிப்பாடாகவே இன்றைய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
இன்று காலை 9.30 மணியளவில் முதலமைச்சர் விஜய் தலைமைச் செயலகத்திற்கு வருகை தருகிறார். பின்னர், நிதியமைச்சர் மரிய வில்சன் முதலமைச்சரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற பிறகு, காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
இதையும் படிங்க: விடிந்ததுமே இடியை இறக்கிய விஜய் அரசு... முன்னாள் அமைச்சர் உட்பட 150 பேர் மீது பாய்ந்தது அதிரடி ஆக்ஷன்...!
தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட் என்பதால், மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதேவேளையில், தமிழகத்தின் மொத்தக் கடன் சுமை சுமார் ₹13 லட்சம் கோடி அளவில் இருப்பதால், நிதிநிலை மற்றும் புதிய நலத்திட்டங்கள் ஆகிய இரண்டுக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்தும் வகையில் பட்ஜெட் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து நிதித்துறை வட்டாரங்களில் கிடைத்த தகவலின்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த 436 வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கில், அவற்றை ஓராண்டு, மூன்றாண்டு மற்றும் ஐந்தாண்டு திட்டங்கள் என்ற அடிப்படையில் செயல்படுத்துவதற்கான திட்டமிடல்களை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் விஜய் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார். இதற்கு "வெற்றி தமிழகம்" என்ற தொலைநோக்குத் திட்டமே அடிப்படையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
அரசு பொறுப்பேற்ற உடனேயே 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வரும் செப்டம்பர் 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு முக்கிய நலத்திட்டங்கள் நடைமுறைக்கு வர உள்ளன. அவை, தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் மற்றும் காலை உணவுத் திட்டத்தை ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு விரிவுபடுத்தும் திட்டம் ஆகும்.
அதேநேரத்தில், தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹2,500 வழங்கும் திட்டம், ஆண்டுக்கு ஆறு இலவச எரிவாயு சிலிண்டர்கள், திருமண உதவித் திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்கம் (ஒரு சவரன்) வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் குறித்து அரசுத் துறைகள் ஆய்வு மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் திட்டங்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் செயல்படுத்துவதற்குப் பதிலாக, நிதி நிலை மற்றும் செயல்படுத்தும் சாத்தியக்கூறுகளை கருத்தில் கொண்டு கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டையே அரசு எடுத்துள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக, இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, சுயதொழில் தொடங்க கடனுதவி வழங்குவது, சாலை, மேம்பாலம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது போன்ற அம்சங்கள் தொடர்பாக புதிய அறிவிப்புகள் இந்தப் பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பான அறிக்கையும் முதலமைச்சரிடம் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இந்தத் திட்டம் இன்றைய பட்ஜெட்டிலேயே இடம்பெறுமா என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. மாநிலத்தின் கடன் சுமை மற்றும் நிதி நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, புதிய அறிவிப்புகள் சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், தலைமைச் செயலகத்தில் வழக்கத்தை விட கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தலைமைச் செயலகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சட்டப்பேரவையில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுவதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை வளாகத்தின் பாதுகாப்பு முழுவதும் சபாநாயகரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அவைக் காவலர்களின் பொறுப்பாக இருக்கும். அதேநேரத்தில், தலைமைச் செயலகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வழக்கம்போல் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். சட்டப்பேரவைக்குள் ஏற்படும் எந்தவொரு சூழலையும் சபாநாயகரின் உத்தரவின்படி அவைக் காவலர்கள் கையாளுவார்கள்.
இன்று காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, பிற்பகல் ஒரு மணியளவில் நிதித்துறைச் செயலாளர் சித்திக் செய்தியாளர்களைச் சந்தித்து பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை விளக்க உள்ளார்.
மேலும், சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது. அந்தக் கூட்டத்தில் தற்போதைய சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது, எந்தெந்த தேதிகளில் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெறுவது, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் மானியக் கோரிக்கைகள் எப்போது எடுத்துக்கொள்ளப்படும் என்பது உள்ளிட்ட விவரங்கள் இறுதி செய்யப்பட உள்ளன. அதன் பின்னர் கூட்டத்தொடரின் முழுமையான அட்டவணை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
மேலும், சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரங்களில் நிலவி வருகிறது.
இதையும் படிங்க: இதெல்லாம் சரியில்ல - உதயநிதி கைது குறித்து சி.எம்.விஜய்க்கு திருமா கொடுத்த அட்வைஸ்...!