சென்னை: தமிழகத்தில் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களின் கீழ் பயன்பெறும் 19 லட்சத்து 71 ஆயிரத்து 15 பயனாளிகளுக்கும் பண்டிகை காலத்துக்குள் ஓய்வூதியத் தொகையை வழங்கும் வகையில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் மாற்றுத்திறனாளிகள், கணவரை இழந்தவர்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், வேளாண் தொழிலாளர்கள் உள்ளிட்ட நலிவுற்ற பிரிவினருக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 12 வகையான திட்டங்களின் கீழ் தகுதியான பயனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டங்களின் கீழ் ஆகஸ்ட் மாதத்துக்கான மொத்த ஓய்வூதியத் தொகை ரூ.238.76 கோடியாகும். இதில் மத்திய அரசின் பங்களிப்பு ரூ.52.81 கோடியாகவும், தமிழக அரசின் கூடுதல் ஓய்வூதியத் தொகை ரூ.185.95 கோடியாகவும் உள்ளது.
இதையும் படிங்க: டாஸ்மாக் முறைகேட்டுக்கு செக்! ஊழியர்கள் மட்டுமல்ல, மாவட்ட மேலாளர்களுக்கும் ஆப்பு? அமைச்சர் விக்னேஷ் அதிரடி எச்சரிக்கை!
இதற்கிடையே, ஓய்வூதியத் தொகை வழங்குவதற்கான பட்டியல்கள் மத்திய அரசின் எஸ்என்ஏ-ஸ்பார்ஷ் நிதிப் பரிவர்த்தனை தளத்தின் மூலம் செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நடைமுறையில் ஏற்பட்ட மாற்றமே தற்போதைய தாமதத்துக்கு முக்கிய காரணம் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
மேலும், தொடர்ந்து வந்த விடுமுறை நாள்களால் பல்வேறு நிறுவனங்களின் ஒப்புதல் பெறுதல், நிதி தொடர்பான பணிகள் மற்றும் வங்கிச் செயல்முறைகளை விரைவுபடுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறுகிய கால அவகாசம் இருந்தபோதிலும், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு இடையே தொடர் கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அரசு கூறியுள்ளது.
தொடர் விடுமுறை நாள்களிலும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு, தேவையான அனைத்து நடைமுறைகளும் முடிக்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் பண்டிகை காலத்துக்குள், அதாவது திங்கள்கிழமைக்குள், தகுதியான பயனாளிகளுக்கு ஓய்வூதியத் தொகையை வழங்க முடிந்ததாகவும் கூறியுள்ளது.
தகுதியுடைய அனைத்து பயனாளிகளுக்கும் சமூகப் பாதுகாப்பு நலத்திட்டப் பலன்கள் காலதாமதமின்றி, தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதில் தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
இதனால் ஓய்வூதியத் தொகையை எதிர்பார்த்துக் காத்திருந்த 19.71 லட்சம் பயனாளிகளுக்கு நிம்மதி கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இனி தனி கட்டுப்பாடு! இந்து சமய அறநிலையத்துறையில் தமிழக அரசு கொண்டுவந்த முக்கிய மாற்றம்!