அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற நாள் முதல் அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஒரு பக்கம் எதற்கெடுத்தாலும் வரி விதித்து வரும் டிரம்ப், மறுபக்கம் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற கொள்கையை கடைபிடித்துக்கொண்டு சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்பவர்களை நாடு கடத்தும் உத்தரவை பிறப்பித்தார். அதில் இந்தியர்கள் 300க்கும் அதிகமானோர் நாடு கடத்தப்பட்டனர். இதனிடயே டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க நீதிமன்றம் தற்காலிக தடை விதித்தது. இருந்தபோதிலும் டிரம்ப் நாடு கடத்துவதை நிறுத்தவில்லை என கூறப்படுகிறது.

மேலும் டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு பல உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் தனது முடிவில் உறுதியாக இருக்கும் டிரம்ப், தான் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டேன் என்பது போல், நாடு முழுவதும் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிய குடியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதோடு, தினமும் 3 ஆயிரம் பேரை கைது செய்ய வேண்டும் என்பதை இலக்காக வைத்து செயல்படுமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: டிரம்ப் போட்ட ஒரே போடு.. கலவர பூமியாக மாறிய லாஸ் ஏஞ்சல்ஸ்.. குவிந்த ராணுவ வீரர்கள்..!

அதன்படி கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு, முறையான ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருந்த சுமார் 44 பேரை கைது செய்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, வெளிநாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, போலீசாரை கண்டித்தும் அரசுக்கு எதிராக முழக்க மிட்டபடியும் பேரணியாக சென்றனர். இதையடுத்து போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் அவர்களை கலைக்க முயன்றனர்.

இதனிடையே கைது செய்யப்பட்ட 44 பேருக்கு ஆதரவாக கடந்த 3 நாட்களாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கி, அதிகாரிகளை தாக்கியதோடு, வாகனங்களுக்கு தீவைத்து எரித்தனர். இதனால் அப்பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது.
இதனைத்தொடர்ந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கலவரம் பரவுவதை கட்டுப்படுத்த அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து உள்ளார். அவரது உத்தரவின் பேரில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கலவரம் நடந்த பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் கலவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இருப்பினும் லாஸ் ஏஞ்சல்ஸ், சான்பிரான்சிஸ்கோ பகுதிகளில் நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் கடைகள், வாகனங்கள், வணிக நிறுவனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. மேலும் இந்த சம்பவத்தில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், தொடர் பதற்றம் காரணமாக மேலும் 2000 பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே அதிபர் டிரம்ப் அரசின் செயல்பாடுகளால் ஆத்திரமடைந்த கலிபோர்னியா கவர்னர் கவின் நியூஸ்கம் உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் போராட்டக்கார்களுக்கு எதிராக 2000 தேசிய காவல் படை போலீசாரை குவித்தது சட்ட விரோதம் என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: டிரம்ப் போட்ட ஒரே போடு.. கலவர பூமியாக மாறிய லாஸ் ஏஞ்சல்ஸ்.. குவிந்த ராணுவ வீரர்கள்..!