தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஓ. பன்னீர்செல்வமும் வி.கே. சசிகலாவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையாமல் இருப்பது ஒரு சுவாரஸ்யமான திருப்பமாகவே தொடர்கிறது. இருவருமே ஜெயலலிதாவின் நெருங்கிய வட்டத்தில் இருந்தவர்கள். பன்னீர்செல்வம் கடந்த ஆண்டு வரை என்டிஏ-வில் இருந்தார். ஆனால், பாஜக தலைமையால் தனக்கு போதுமான மதிப்பு வழங்கப்படவில்லை என்ற உணர்வு ஏற்பட்டதால், அவர் கூட்டணியிலிருந்து வெளியேறினார்.
அதன் பிறகு அவர் அதிமுகவில் மீண்டும் இணைய விருப்பம் தெரிவித்தாலும், பழனிசாமி தரப்பு கடுமையாக மறுத்துவிட்டது. "சசிகலாவோ பன்னீர்செல்வமோ எங்களுடன் இடமில்லை" என்று பழனிசாமி தெளிவாக அறிவித்தார். இதனால் பன்னீர்செல்வம் தனித்து நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். சமீபத்தில் அவர் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தபோது, திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகவே கருத்து தெரிவித்தது அவரது குழப்பமான நிலையை காட்டுகிறது. என்டிஏ-வில் மீண்டும் இணைய வாய்ப்பு குறித்து பேச்சுகள் எழுந்தன.

அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தமிழகத்தில் கூட்டணியை வலுப்படுத்த விரும்புவதால், பன்னீர்செல்வத்தை மீண்டும் அழைக்க முயற்சிகள் நடந்ததாக தகவல்கள் வெளியாகின. சசிகலா தனி கட்சியை தொடங்க இருப்பதாகவும் ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று அவர் தனி கட்சி குறித்து அறிவிப்பார் எனவும் கூறப்பட்டு வந்தது.
இதையும் படிங்க: புதிய கட்சி? துரோகிகளை வேரறுக்கணும்... சசிகலா அழைப்பு..!!
இந்த நிலையில், சசிகலாவும், ஓ. பன்னீர்செல்வமும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவார்கள் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தீய சக்தி திமுக ஆட்சியை வீழ்த்தி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வருவார்கள் என்றும் கூறியுள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொண்டர்கள் 99.9 சதவீதம் பேர் தற்போது ஒன்றாக இணைந்திருப்பதாக தெரிவித்தார். மேலும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் 40 தொகுதிகள் வரை கேட்டு வருவதாக தகவல் வெளியாக இருப்பதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: டெண்டர்களை அள்ளி வீசும் திமுக... கஜானாவை காலி பண்ணாம விட மாட்டாங்க...! TTV தினகரன் விமர்சனம்..!!