ஓசூர் தொகுதியில் தவெக வேட்பாளர் அறிவிப்பில் ஏற்பட்ட குழப்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பே இப்படி ஒரு குழப்பம் ஏற்பட்டிருப்பது, தவெக நிர்வாகிகளுக்கு அரசியல் அனுபவம் இல்லை என்பதை வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொகுதியில் தவெக சார்பில் முதலில் மஞ்சுநாத் என்றவரை வேட்பாளராக நடிகர் விஜய் அறிவித்தார். ஆனால் அவர் போட்டியிடாமல் விலகியதால், அவருக்கு பதிலாக அம்பரீஷ் என்றவரை வேட்பாளராக அறிவித்தது.
எனினும், கடைசி நேரத்தில் தவெகவின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலர் வடிவேல் (வடிவேல் வேந்தர்க்கரசன்) நேற்று முன்தினம் ஓசூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த திடீர் மாற்றத்துக்கு, சூளகிரி முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் மது ஹேம்நாத்தின் அழுத்தம் காரணமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அண்மையில் தவெகவில் இணைந்த மது ஹேம்நாத்தின் செல்வாக்கு காரணமாகவே வடிவேல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: மெயின் ஸ்க்ரீனுக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மருகமன்!! நண்பனுக்காக களத்தில் குதித்தார் சபரீசன்!!

இதற்கு முன்பு வடிவேல் தான் ஓசூர் தொகுதி வேட்பாளர் என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவியபோது, தவெகவினர் “இது உண்மையல்ல, அம்பரீஷ்தான் வேட்பாளர்” என்று மறுப்பு தெரிவித்து சமாளித்தனர். ஆனால் இறுதியில் அம்பரீஷ் வேட்புமனு தாக்கல் செய்யாமல், வடிவேல் தாக்கல் செய்துள்ளார்.
இந்த தொடர் மாற்றங்களும் குழப்பங்களும் கிருஷ்ணகிரி மாவட்ட தவெகவில் ஒரு தரப்பினரை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளன. வேட்பாளர் அறிவிப்பு முதல் வேட்புமனு தாக்கல் வரை இப்படி ஒரு குழப்பம் ஏற்பட்டிருப்பது, தவெக நிர்வாகிகளுக்கு அரசியல் அனுபவம் போதாது என்பதை தெளிவாகக் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் தவெகவில் ஏற்பட்டுள்ள இந்த உள் குழப்பம், கட்சியின் தேர்தல் தயாரிப்பை பாதிக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. விஜய் தலைமையிலான தவெக எப்படி இந்த சவால்களை சமாளிக்கப் போகிறது என்பது இப்போது பெரும் கேள்வியாக உள்ளது.
இதையும் படிங்க: என்ன விஜய்?!! இப்படிப்பண்ணா எப்படி? பெரம்பூரில் பூட்டிக் கிடக்கும் தவெக அலுவலகம்!!