தி.மு.க., ஆட்சியில், முக்கிய துறைகளில் நடந்துள்ள, 'டெண்டர்' முறைகேடு குறித்து ஆய்வு செய்ய, அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் அடங்கிய, ரகசிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தி.மு.க., ஆட்சியில் பல்வேறு துறைகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் டெண்டர் முறைகேடுகளை ஆராய்வதற்காக தமிழக அரசு ரகசிய குழுக்களை அமைத்துள்ளது. நகராட்சி நிர்வாகம், வருவாய், மக்கள் நல்வாழ்வு, ஊரக வளர்ச்சி, பொதுப்பணி, நெடுஞ்சாலை, மின்சாரம், கல்வி உள்ளிட்ட 41 துறைகளில் இந்த விசாரணை நடைபெற உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இந்தத் துறைகளுக்கு 20,000 முதல் 40,000 கோடி ரூபாய் வரை பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. இந்த நிதியில் பெரும் பகுதி ஒப்பந்ததாரர்கள் மூலம் பணிகளாகச் செயல்படுத்தப்பட்டன.
இதையும் படிங்க: சீனாவுக்கு நிகராக சிவகாசி பட்டாசு ஏற்றுமதி வளரும்! அமைச்சர் கீர்த்தனா அதிரடி திட்டம்! மாஸ்டர் ப்ளான்!
ஆனால், தி.மு.க., ஆட்சியில் சில அமைச்சர்கள் தங்கள் பினாமிகளை ஒப்பந்ததாரர்களாக நியமித்து பணிகளை வழங்கியதாகவும், ஒவ்வொரு பணிக்கும் 20 முதல் 40 சதவீதம் வரை கமிஷன் பெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பணிகள் தொடங்குவதற்கு முன்பே முன்பணமாக கமிஷன் பெறப்பட்டதாகவும், அதில் துறை அதிகாரிகளும் உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., அரசு பொறுப்பேற்ற பிறகு, இந்த கமிஷன் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்களுக்கு தெளிவான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. டெண்டர் விவகாரங்களில் அமைச்சர்களின் தலையீடு இருக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரும் 18ம் தேதி தொடங்கும் சட்டசபை கூட்டத்தொடருக்கு முன்பாக, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தி.மு.க., அரசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆதாரங்களை சேகரிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு துறையிலும் நேர்மையான அதிகாரிகள் மற்றும் அலுவலர்களைக் கொண்ட ரகசிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. துறை செயலர்கள் தலைமையில் இக்குழுக்கள் ஏற்கனவே முதற்கட்ட ஆலோசனை கூட்டங்களை நடத்தியுள்ளன. டெண்டர் முறைகேடுகள் தொடர்பான ஆவணங்கள், ஒப்பந்த விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை திரட்டும் பணி தீவிரமடைந்துள்ளது.
இந்த அறிக்கைகள் துறை செயலர்கள் வாயிலாக முதல்வர் விஜயிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளன. இந்த நடவடிக்கை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க., தரப்பில் இருந்து எப்படி பதிலடி வரும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மக்களின் வரிப்பணம் சரியான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் முதல்வர் விஜய் உறுதியாக இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விசாரணை முடிவுகள் அடுத்த சில வாரங்களில் பொதுமக்கள் முன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சிங்கப்பெண் அதிரடிப்படையின் ஆக்ஷன்!! இன்று முதல் ஆரம்பம்! களமிறங்கிய காவலர்கள்!