சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் சி.ஜோசப் விஜய் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார். இதன் மூலம் கடந்த ஐந்து நாட்களாக நீடித்த அரசியல் பரபரப்புக்கு முடிவு ஏற்பட்டுள்ளது.
2024 பிப்ரவரியில் கட்சியைத் தொடங்கிய விஜய், வெறும் இரண்டு ஆண்டுகளுக்குள் முதலமைச்சர் பதவியைப் பிடித்து அசத்தியுள்ளார். பதவியேற்பு விழாவில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்ற உடனேயே முதலமைச்சர் விஜய் மூன்று முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.
அதில் முதல் கோப்பு மக்களுக்கு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்துக்கு முதலமைச்சர் விஜய் ஒப்புதல் அளித்தார். இதனால் பல லட்சம் மக்களின் மின்கட்டணம் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்!! வாய்ப்பு கிடைத்த அடுத்த கணமே மாறும் தலைமை!! மோடி குற்றச்சாட்டு!

இந்த அறிவிப்புக்குப் பிறகு, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் தொடருமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 500 யூனிட்டுக்குள் பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட் இலவசமாகவும், 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு 100 யூனிட் இலவசமாகவும் வழங்கப்படும். இதன்மூலம் முந்தைய 100 யூனிட் திட்டம் தொடரும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிய அரசு அமைந்த முதல் நாளிலேயே மக்கள் நலன் சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட விஜய், தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக, கூட்டணி ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று கொண்டாட்ட சூழல் நிலவுகிறது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் செயல்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: முன்னாள் முதல்வர்கள் கலந்து கொள்ளாத பதவியேற்பு விழா! மு.க.ஸ்டாலின்! இபிஎஸ்! ஓபிஎஸ் ஆப்சென்ட்!