தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுத் தனிப்பெரும் கட்சியாகத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) உருவெடுத்துள்ள நிலையில், அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்துத் தனது கட்சியின் புதிய எம்எல்ஏக்களுடன் தலைவர் விஜய் இன்று மதியம் அவசர ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகம் முழுவதும் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர்கள் அனைவரும் உடனடியாகச் சென்னை வருமாறு தலைமை உத்தரவிட்டுள்ளதால், அவர்கள் அனைவரும் சென்னையை நோக்கிப் புறப்பட்டுச் செல்கின்றனர். இன்றையக் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ள முக்கிய முடிவுகள்:
தேர்தலில் வெற்றி பெற்றுச் சாதனை படைத்த வேட்பாளர்களுக்கு விஜய் நேரடியாகத் தனது வாழ்த்துகளைத் தெரிவிக்க உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்றக் குழுத் தலைவராக விஜய் அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இதற்கான ஆதரவுக் கடிதத்தில் அனைத்து எம்எல்ஏக்களும் கையெழுத்திட உள்ளனர்.
இதையும் படிங்க: "கொசுத் தொல்லை: 48 மணி நேரத்தில் ஆக்ஷன் எடுங்க!" - தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ள நிலையில், தவெக சார்பில் அமைச்சர்களாகப் பதவியேற்கப் போவது யார்? யார்? என்பது குறித்த இறுதிப் பட்டியலும் இந்தக் கூட்டத்தில் தயாரிக்கப்பட உள்ளது.
தேர்தலுக்கு முன்பே தவெக-வின் அமைச்சரவைப் பட்டியல் எனக் கூறி ஒரு பட்டியல் சமூக வலைத்தளங்களில் வைரலானது. தற்போது 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அதே பட்டியல் நேற்றும் மீண்டும் இணையதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
108 தொகுதிகளில் வெற்றி பெற்று 34.92% வாக்கு விழுக்காட்டுடன் தவெக சாதனை படைத்துள்ள சூழலில், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களைப் பெறுவது குறித்துப் பாமக போன்ற கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கிடையே, தமிழகப் பொறுப்பு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று சென்னை வரவுள்ளதால், விஜய் அவரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
கொளத்தூரில் ஸ்டாலின் தோல்வி மற்றும் பல அமைச்சர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, தமிழக அரசியலில் விஜய்யின் இந்த அடுத்தகட்ட நகர்வு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சித்ரா பவுர்ணமி ஸ்பெஷல்..!! சென்னையில் இருந்து 30ம் தேதி சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!