சாலை அமைக்காமல் அமைத்ததாகக் கணக்குக் காட்டி ரூ.3.23 கோடி முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையில் சாலைப் பணிகளை மேற்கொள்ளாமலேயே பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்த வழக்குத் தொடர்பாக தற்போது 14 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. திருவண்ணாமலையில் உள்ள முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் இல்லம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: "கோடிக்கணக்கில் ஊழல்".? எ.வ. வேலு உட்பட 11 பேர் மீது பாய்ந்த வழக்கு..! தலையில் இறங்கும் பேரடி..!!
அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷ் அளித்த புகாரின் அடிப்படையிலேயே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அவர் நான்கு பக்கங்களைக் கொண்ட புகார் மனுவை அளித்ததாகவும், அதன் அடிப்படையில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அந்த புகாரில், கரூர் மற்றும் பிற பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளும் ஒப்பந்ததாரர்களும் கூட்டுச் சேர்ந்து, எந்தப் பணிகளையும் மேற்கொள்ளாமல் அரசுப் பணத்தை முறைகேடாக பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
மேலும், திருப்பூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்டத்திற்குட்பட்ட கரூர் பகுதியில் சாலை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்காக "சங்கரானந்தா இன்ப்ரா" நிறுவனத்திற்கு சுமார் ரூ.7 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் வழங்கப்பட்டதாகவும், ஆனால் எந்தச் சாலையும் அமைக்கப்படாத நிலையில் 2022 மார்ச் 25 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மட்டும் ரூ.3.23 கோடி முறைகேடாக விடுவிக்கப்பட்டதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த முறைகேடு தொடர்பாக நடைபெற்ற ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில், கரூரைச் சேர்ந்த கோட்டப் பொறியாளர் சத்தியபாமா, உதவிக் கோட்டப் பொறியாளர் கண்ணன் உள்ளிட்ட நான்கு அதிகாரிகளும், ஈரோடு, நாமக்கல் மற்றும் கிராமப்புறப் பகுதிகளைச் சேர்ந்த கோட்டப் பொறியாளர்கள் உள்ளிட்ட ஐந்து அதிகாரிகளும் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.
முறைகேடு வெளிச்சத்துக்கு வந்த பிறகு, குற்றத்திற்கான ஆதாரங்களை மறைப்பதற்காக அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கூட்டுச் சேர்ந்து அவசர அவசரமாக சாலை அமைத்ததாகவும் அந்தப் புகாரில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

அறப்போர் இயக்கத்தின் புகாரைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 23, 2026 அன்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்து தற்போது சோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், எ.வ.வேலு உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் தொடர்புடைய இடங்களில் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சோதனையின் முடிவில் கைப்பற்றப்படும் பணம், ஆவணங்கள் மற்றும் பிற ஆதாரங்கள் தொடர்பான விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: எ.வ. வேலு வீட்டில் ரெய்டு..! ஆளுங்கட்சி மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம். ! ஸ்டாலின் திட்டவட்டம்..!!