தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 30-ம் தேதி தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெற்று, அதே நாளில் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு பெரும்பாலும் முடிவடைந்துவிட்டது. இன்னும் சில கட்சிகளுடன் மட்டுமே பேச்சு நடைபெற்று வருகிறது. இதனிடையே திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி ஒதுக்கீடு, தீவிர பிரசாரம் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் வகுத்தல் ஆகியவற்றில் கட்சிகள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளன.

இந்த முறை தமிழ்நாட்டில் நான்கு முனைப் போட்டி நிலவும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ஜனதா, பாமக, அமமுக, தமாகா, இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி, புரட்சி பாரதம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்துள்ளன.
இதையும் படிங்க: அதிமுக மாவட்ட செயலாளர்கள் அவசர கூட்டம்! நாளை எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை!
இந்தச் சூழலில், பா.ஜனதாவின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயல் நேற்று சென்னைக்கு வந்தார். அவர் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து, தொகுதிப் பங்கீடு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, பா.ஜனதாவுக்கு 27 தொகுதிகள், பா.ம.க.வுக்கு 18 தொகுதிகள் மற்றும் அ.ம.மு.க.வுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கையெழுத்திட்டனர்.
இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை (நாளை மறுநாள்) சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறார். சென்னை மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட மந்தைவெளி மார்க்கெட் பகுதியில் நாளை மாலை 4 மணிக்கு முதல் பிரசாரக் கூட்டத்தை நடத்தவுள்ளார். ஏற்கெனவே மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு மீண்டும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்தலில் அனைத்து கட்சிகளும் தங்களது வாக்குறுதிகள், திட்டங்கள் மற்றும் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்ல தீவிரம் காட்டி வருகின்றன. தொகுதி பங்கீடு முடிவடைந்ததால், கூட்டணிக் கட்சிகள் இனி தனித்தனியாகவும், ஒருங்கிணைந்தும் பிரசாரத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அரசியல் கட்சிகள் தங்களது செயல்பாடுகளை விரைவுபடுத்தியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: புதுச்சேரி தேர்தல் 2026: அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி!