விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி அருகே உள்ள வனஜா பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 25 பேர் உயிரிழந்த சோகம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவிந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துமாணிக்கம் (52) என்பவருக்கு சொந்தமான இந்த ஆலை, மாவட்ட வருவாய் அதிகாரியிடம் உரிமம் பெற்று இயங்கி வந்தது. ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரான அவரது ஆலையில் ஐந்து அறைகளில் பட்டாசு உற்பத்தி நடைபெற்று வந்தது.
நேற்று காலையில் ஆண்கள், பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்கு வந்திருந்தனர். மதிய உணவுக்குப் பிறகு உற்பத்தியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தபோது, ஒரு அறையில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.
இதையும் படிங்க: Breaking!! விஜய் - சங்கீதா விவகாரத்து வழக்கு! வீடியோ கான்ஸ்ப்ரன்ஸ் மூலம் ஆஜர்!! கோர்ட் அதிரடி உத்தரவு!
அந்த அறையில் இருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதற, தீ உடனடியாக அடுத்த அறைகளுக்கும் பரவியது. ஒரு சில நிமிடங்களில் முழு ஆலையும் தீயில் சிக்கியது. பட்டாசுகள் தொடர்ந்து வெடித்ததால் இடிபாடுகள் சிதறின.
உடல்கள் சிதைந்து, கருகிய நிலையில் கிடந்த காட்சி அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சேதமடைந்திருந்தன. இந்த விபத்தில் மொத்தம் 25 பேர் உயிரிழந்தனர். 16 பேர் படுகாயமடைந்து விருதுநகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, ஆலை உரிமையாளர் முத்துமாணிக்கம் மற்றும் அவரது மனைவி ஈஸ்வரி ஆகியோரை தேடி வருகின்றனர். இருவரும் தலைமறைவாக உள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், மருந்து கலக்கும் அறையில் அதிக வெடிபொருட்களை கவனக்குறைவாக கலந்ததாலும், விதிகளை மீறி ஒரே நேரத்தில் அதிக அளவு பட்டாசுகளை தயாரிக்க முயற்சித்ததாலும், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியாற்றியதாலும் விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தோரின் குடும்பத்தினர், நிவாரண நிதி வழங்கப்படும் வரை உடல்களை வாங்க மாட்டோம் என அறிவித்துள்ளனர். தேர்தல் ஆணையம் இதுகுறித்து இன்னும் முடிவெடுக்காத நிலையில், இந்தப் பிரச்னை சிக்கலாகியுள்ளது.
இதனிடையே, மதுரை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. “உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு ஏன் இன்னும் வழங்கப்படவில்லை?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பி, அரசுத் தரப்புக்கு விளக்கம் தர உத்தரவிட்டுள்ளனர்.
இந்த விபத்து தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிகள் கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்பது மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் விரைவில் கிடைக்க வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: என்னையே ஒருவாட்டி ஏமாத்தியிருக்கு! மறுபடி ஏமாறக்கூடாது! நாங்கள் விளையாட வரவில்லை - கமல் சூளுரை!