தமிழ்நாட்டில் அடுத்த மாதம் முதல் 6 சதவீதம் மின்கட்டணம் உயர உள்ளது. இந்த மின்கட்டன உயர்வால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படும் என்று கடும் எதிர்ப்பு எழுந்தள்ளது. குறிப்பாக கோவைக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. தொழில் நகரமாக இருக்கும் கோவையில் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், பம்ப்செட், வார்ப்படம், கிரைண்டர் போன்ற தொழில்கள் பிரதானமாக மாறிவிட்டன.

குறிப்பாக இந்தியா முழுவதற்கும் என்ஜினியரிங் பொருட்கள் உற்பத்தி செய்யும் இடமாக கோவை உள்ளது. இந்நிலையில் மின்கட்டணஉயர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கவலை தெரிவிக்கிறார்கள். இதை அடுத்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்க (டேக்ட்) தலைவர் ஜேம்ஸ், தமிழக முதல்-அமைச்சருக்கு மனு அனுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: துணிகட்டி மறைக்க இது பாஜக மாடல் அல்ல; திராவிட மாடல்.. விமர்சனத்துக்கு மு.க ஸ்டாலின் பதிலடி!!

அந்த மனுவில், தமிழகத்தில் கடந்த 2022-ம் ஆண்டு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவை ஏற்று மின்வாரியம் சிறு, குறுதொழில் முனைவோர்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கான கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியது. நிலைகட்டணம் 450 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. இதனால் உற்பத்தி செலவில் பெரும் தொகையை மின்கட்டணத்துக்கே செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. ஆண்டுக்கு 6 சதவீதம் உயர்த்தப்படுவதால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.

அடுத்த மாதம் முதல் உயர்த்த உள்ள 6 சதவீதம் மின்கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும். நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும். 12 கிலோ வாட்டுக்கு கீழ் மின் இணைப்பு பெற்றவர் களுக்கு 3 பி-யில் இருந்து 3 ஏ1 ஆக மாற்றி அமைக்க உத்தரவிட்ட அரசின் உத்தரவு இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளது. அதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொதுக்குழுவில் கூடுவோம்! பொதுத் தேர்தலில் வெல்வோம்... கழக உடன்பிறப்புகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!