ஜூன் ஒன்றாம் தேதி மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இந்த நிலையில் திமுக உடன் பிறப்புகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். பேரறிஞர் அண்ணா தலைமையில் உருவாகி, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் தலைமையில் இரும்புக் கோட்டையாகக் கட்டிக்காக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் இன்று இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத மாநிலக் கட்சி என்ற நிலையை அடைந்திருப்பதற்குக் காரணம், பொதுக்குழு - செயற்குழு - மாநாடு என எதுவாக இருந்தாலும் அது கொள்கை சார்ந்த நோக்கத்துடன் நடத்தப்பட்டு, அதற்குரிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, செயல்வடிவம் பெறுவதால்தான் என தெரிவித்துள்ளார்.

ஒன்றிய பா.ஜ.க. அரசு நாட்டு மக்களின் நிலை பற்றிச் சிந்திக்காமல் பண மதிப்பிழப்பு நடவடிக்கை முதல் நகைக்கடன் நிபந்தனைகள் வரை இந்திய ரிசர்வ் வங்கி மூலம் தாக்குதல் தொடுத்து வருகிறது. ஒன்றிய அரசு வஞ்சித்தாலும், ஏழை - எளிய மக்களை மாநில அரசின் கூட்டுறவு வங்கிகள் அரவணைக்கும். முந்தைய ஆட்சியாளர்கள்போல பதவிக்காக, மாநில உரிமைகளை ஒன்றிய அரசிடம் அடகு வைக்கும் வழக்கம் திராவிட மாடல் அரசுக்கு இல்லை. கல்விக்கான நிதியை ஒன்றிய அரசு தர மறுத்தாலும், அண்ணா தந்த இருமொழிக் கொள்கையே இங்கே நிலைத்திருக்கும் என்ற உறுதியுடன் மாநில அரசின் நிதியில் கல்விக்குச் செலவிடுகிறோம் எனக் கூறினார்.
இதையும் படிங்க: உங்க துருப்பிடித்து போன இரும்புக் கரத்தை ரிப்பேர் பண்ணுங்க.. முதல்வர் ஸ்டாலினை நயினார் பங்கம்!

நாம் என்ன செய்ய வேண்டும்? நமக்கான கடமை என்ன? நம் இலட்சியப் பயணத்தின் இலக்கு எது? என்பதையெல்லாம் உடன்பிறப்புகளாம் உங்களுடன் ஆலோசித்து முடிவெடுக்க திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு மதுரை உத்தங்குடி கலைஞர் திடலில் ஜூன் 1-ஆம் நாள் கூடுகிறது. கழகத்தின் தலைவர் என்ற முறையிலும் உங்களில் ஒருவனாகவும் பொதுக்குழு உறுப்பினர்களையும் சிறப்பு அழைப்பாளர்களையும் அன்புடன் அழைப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொதுக்குழுவில் கூடிடுவோம்! பொதுத்தேர்தலில் வென்றிடுவோம் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: புதிய நகைக்கடன் நெறிமுறைகள் விவசாயிகளை வஞ்சிக்கும்! நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் கடிதம்...