சேலம் மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்களை ரகசியமாக வீடியோ பதிவு செய்து மிரட்டியதுடன், அவர்களை பாலியல் ரீதியாக சுரண்டியதாகவும், தவறான செயல்களில் ஈடுபடுத்தியதாகவும் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்ததா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், ஆதாரங்களுடன் சேலம் மாநகர காவல் ஆணையரிடம் சுமார் 10 நாட்களுக்கு முன்பு புகார் மனு அளித்ததாக கூறப்படுகிறது. அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்துமாறு காவல் ஆணையர் உத்தரவிட்ட நிலையில், மனு சேலம் கொண்டலாம்பட்டி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், காவல்துறையினர் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த வழக்கில் சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவர் தமிழக வெற்றி கழகத்தில் பொறுப்பில் இருப்பதாகவும், அதே பகுதியில் மல்லிகைப் பூ கடை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: “what bro its very wrong bro...” - பாலியல் வழக்கில் தவெக நிர்வாகி கைது... விஜய்க்கு அண்ணாமலை கொடுத்த அட்வைஸ்...!
பாதிக்கப்பட்ட பெண்களின் குற்றச்சாட்டின்படி, கஷ்டத்தில் இருந்த பெண்களுக்கு உதவுவதாக நம்பிக்கை ஏற்படுத்திய மணிகண்டன், பின்னர் அவர்களை தனியாக அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், பெண்களுக்குத் தெரியாமல் அவர்களது தனிப்பட்ட தருணங்களை வீடியோ பதிவு செய்து, பின்னர் அந்த வீடியோக்களை காட்டி மிரட்டி பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுமட்டுமின்றி, சில பெண்களை தனது நண்பர்களிடமும் அனுப்பி வைத்ததாகவும், செல்போன் மற்றும் வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் ஆபாசமாக பேசியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இவரால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு பெண், இனி ஒத்துழைக்க முடியாது என மணிகண்டனிடம் தெரிவித்தபோது, தன்னிடம் உள்ள வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்த பெண் மணிகண்டனை நேரில் சந்தித்தபோது, அவரது செல்போனில் இருந்த பல பெண்களின் வீடியோக்களை தனது செல்போனுக்கு மாற்றிக் கொண்டு அங்கிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. பின்னர், அவற்றை பென் டிரைவில் சேமித்து, சேலம் மாநகர காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு ஆதாரங்களுடன் அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகார் காவல் ஆணையரிடம் சென்றதைத் தொடர்ந்து, விசாரணைக்காக கொண்டலாம்பட்டி காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், சம்பந்தப்பட்ட நபரை முறையாக விசாரிக்காமல், அவரது செல்போனில் இருந்த வீடியோக்களை மட்டும் அழித்துவிட்டு அனுப்பியதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட தரப்பினரின் கூற்றுப்படி, மணிகண்டனின் செல்போனில் 50-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அந்த பெண்களின் பாதுகாப்பு குறித்து அச்சம் நிலவுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், காவல்துறையை நம்பி அணுகிய நிலையில், உரிய உதவி கிடைக்கவில்லை என்றும், குற்றச்சாட்டுக்குள்ளான நபர் தப்பிக்க வைக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மணிகண்டன் மீது ஏற்கனவே கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, அன்னதானப்பட்டி உள்ளிட்ட காவல் நிலையங்களில் குட்கா கடத்தல் தொடர்பான பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதோடு, குற்றச்சாட்டுகள் தொடர்பாக முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வழக்கில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து காவல்துறையின் அதிகாரப்பூர்வ விளக்கம் மற்றும் விசாரணை முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை.
இதையும் படிங்க: யார் அந்த சார்?... உளறல் நிதி பதில் சொல்லத் தயாரா?... உதயநிதியை வம்பிழுத்த தவெக ஐ.டி.விங்க்...!