தமிழக அரசியல் வரலாற்றில் அதிமுகவுக்கு 2026 சட்டமன்றத் தேர்தல் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பின் தொடர்ச்சியான சவால்களை எதிர்கொண்டு வந்த அதிமுக, இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தையே இழந்து, மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் 234 உறுப்பினர்களில் அதிமுக சுமார் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களுடன் ஆட்சி அமைக்கும் நிலைக்கு வந்துள்ளது. தி.மு.க கூட்டணி சுமார் 59 இடங்களுடன் புதிய எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. இது அதிமுகவுக்கு மட்டுமின்றி, தமிழக அரசியல் சமன்பாட்டுக்கே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தோல்வியின் வேர்கள் பல ஆண்டுகளுக்கு முந்தையவை. 2016-ல் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவில் உள்ளகப் பூசல்கள் தீவிரமடைந்தன. ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி இடையிலான பிளவு, சசிகலா அரசியல், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அ.ம.மு.க) உருவாக்கம் போன்றவை கட்சியின் ஒற்றுமையை சிதைத்தன.

2021 தேர்தலில் தி.மு.க கூட்டணியிடம் தோற்றாலும், எதிர்க்கட்சி அந்தஸ்தைத் தக்க வைத்துக்கொண்ட அதிமுக, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தனித்து போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் தோற்றது. வாக்கு சதவீதம் சற்று உயர்ந்தாலும் (சுமார் 20.46%), எந்த இடத்திலும் வெற்றி பெற முடியவில்லை. இது கட்சியின் அடித்தளத்தை பலவீனப்படுத்தியது.
இதையும் படிங்க: ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் விஜய்! ஆளுநருக்கு அவசர கடிதம்!
2026 தேர்தலுக்கு முன் அதிமுக பா.ஜ.க, பா.ம.க, அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகளுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது. ஆனால், தே.வெ.க-வின் உதயம் முழு அரசியல் சமன்பாட்டையே மாற்றியது. விஜய்யின் தலைமையில் உருவான புதிய கட்சி, இளைஞர்கள், முதல் முறை வாக்காளர்கள் மற்றும் பல்வேறு பிரிவினரின் ஆதரவை ஈர்த்து, பாரம்பரிய அதிமுக - தி.மு.க இருமுனைப் போட்டியை மூன்று முனைப் போட்டியாக மாற்றியது. அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கியான மேற்கு மண்டலம், தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கூட த.வெ.க வலுவான போட்டியை கொடுத்தது. எடப்பாடி பழனிசாமி தனது தொகுதியில் வென்றாலும், கட்சி மொத்தமாக பெரும் இழப்பை சந்தித்தது.
இதையும் படிங்க: 4 தொகுதிகளில் பாமக வெற்றி.. மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம்...! அன்புமணி அறிக்கை!