அதிமுகவில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் குறித்து அக்கட்சியின் எம்.எல்.ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தரப்பினர் எடப்பாடி பழனிசாமி மீது சுமத்திய குற்றச்சாட்டுகளுக்குப் புள்ளிவிவரங்களுடன் அவர் பதிலடி கொடுத்தார்.
சி.வி. சண்முகத்தின் புகார்களுக்குப் பதிலளித்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது திமுகவின் துணையோடு ஆட்சியமைக்க எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) முயன்றதாகச் சி.வி. சண்முகம் கூறுவது அடிப்படை ஆதாரமற்ற தகவல். உண்மையில், திமுகவுடன் தொடர்பு வைத்து ஆட்சியமைக்கலாம் என்று கூறியவர் சி.வி. சண்முகம் தான்; அதனை இபிஎஸ் மறுத்துவிட்டார்.
திருமாவளவனை முதலமைச்சராக்கலாம் என இபிஎஸ்-யிடம் சி.வி. சண்முகம் கூறினார். திருமாவளவன் முதல்வர் ஆவதை இபிஎஸ் எதிர்க்கவில்லை, ஆனால் திமுகவின் ஆதரவோடு அவர் முதல்வர் ஆவதை இபிஎஸ் ஒப்புக்கொள்ளவில்லை.
இதையும் படிங்க: "தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களிப்போம்": இபிஎஸ் எச்சரிக்கையை மீறி சி.வி.சண்முகம் அதிரடி!

அதிமுகவின் தோல்விக்கு இபிஎஸ்-ன் தன்னிச்சையான முடிவுகளே காரணம் என்ற விமர்சனத்தையும் அவர் மறுத்தார். கூட்டணி போக மீதமுள்ள தொகுதிகளில் மாவட்ட செயலாளர்கள் யாரைப் பரிந்துரைத்தார்களோ அவர்களுக்குத்தான் சீட் வழங்கப்பட்டது. விழுப்புரத்தில் சி.வி. சண்முகமும், கோவையில் வேலுமணியும் மட்டுமே வெற்றி பெற்றனர். தங்கள் மாவட்டத்தில் உள்ள மற்ற வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க இவர்கள் முயலவில்லை. இவர்களின் செயல்பாடுகளே தொடர் தோல்விகளுக்குக் காரணம்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிராக வாக்களிக்கக் கொறடா என்ற முறையில் தான் அளித்த அறிவுறுத்தலை மீறியதாலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். எந்த அதிகாரத்தின்படி இபிஎஸ் அவர்களுக்குப் பொறுப்புகளை வழங்கினாரோ, அதே அதிகாரத்தின்படி தற்போது அவர்களைப் பொறுப்பிலிருந்து விடுவித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கே உள்ளது.
அமைச்சர் பதவியைப் பெற வேண்டும் என்ற நோக்கில், தவெக-வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என ஒரு சிலர் வைத்த கோரிக்கையை இபிஎஸ் நிராகரித்துவிட்டார். ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட சி.வி. சண்முகத்திற்கு மீண்டும் பதவி வழங்கியவர் இபிஎஸ் தான் என்பதைச் சுட்டிக்காட்டிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இத்தகைய பொய்த் தகவல்களைப் பரப்புவதை இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என எச்சரித்தார்.
இதையும் படிங்க: அதிமுக-வில் உச்சகட்டப் பிளவு: முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்க நேரம் கேட்டார் சி.வி.சண்முகம்!