தமிழகத்தில் பெண்களுக்கு முறையான பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகள் முன்வைத்து வரும் நிலையில், கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மூன்று குற்றவாளிகளை போலீசார் சுட்டு பிடித்துள்ளனர். தமிழகத்தையே உலுக்கிய சம்பவத்தின் சூடு ஆறுவதற்குள் ஓசூரில் இயங்கி வரும் டாட்டா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் பெண்கள் தங்கும் விடுதியின் குளியலறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏழாயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கி பணிபுரிந்து வரும் அந்த பெண்கள் விடுதியின் குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டு பார்க்க கூறி நேற்று நள்ளிரவு முதலே 2000க்கும் மேற்பட்ட பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை வரை 60க்கும் மேற்பட்ட பெண்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போலீசார் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தி பணிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக வட மாநில பெண் தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பெண்கள் தங்கும் குளியலறைக்குள் ரகசிய கேமரா வைத்ததன் பின்னணியில் இருப்பது யார் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதையும் படிங்க: வளர்ச்சியை சிதைக்க சதி...! என்ன ஆதாரம் இருக்கு? அன்புமணியின் குற்றச்சாட்டை மறுத்த பள்ளிக் கல்வி துறை...!
இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஓசூர் விடுதியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் பெண் ஊழியர்களின் தனியுரிமை மீறப்பட்டதா? கண்ணியம், பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள வன்னியபுரத்தில் செயல்பட்டு வரும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் விடியல் விடுதியின் எட்டாம் பிளாக்கில் உள்ள குளியல் அறைகளில் ரகசிய காமிராக்கள் பொருத்தப்பட்டிருப்பதாகவும், அதில் பதிவான காட்சிகள் வெளியாள்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டி அங்கு பணியாற்றும் பெண்கள் விடிய, விடிய போராட்டம் நடத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. விடுதியில் தங்கியுள்ள பெண்களின் தனியுரிமையை பாதுகாக்க அரசு தவறியது கண்டிக்கத்தக்கது.
டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்கள் தங்குவதற்காக அரசும், டாடா நிறுவனமும் இணைந்து 20 ஆயிரம் பேர் தங்கும் வகையில் விடியல் விடுதியை கட்டிக் கொடுத்துள்ளன. அரசின் கட்டுப்பாட்டில் தான் இந்த விடுதி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. அதனால் இந்த விடுதி மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் அங்கு தங்கியுள்ளனர். ஆனால், அவர்களின் தனியுரிமை, கண்ணியம், பாதுகாப்பு ஆகியவற்றை பாதிக்கும் வகையிலான செயல்பாடுகள் நடைபெற்றிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
பெண் தொழிலாளர் விடுதியின் குளியலறையில் காமிராக்களை பொருத்தியதால ஒரு பெண் பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் பின்னணியில் வேறு எவரேனும் இருக்கிறார்களா? என்பதைக் கண்டறிந்து அவர்களையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். பெண் தொழிலாளர்கள் தொடர்பான காணொலிகள் சமூக வலைத்தளங்களில் பரவியிருந்தால், அவற்றை முடக்க வேண்டும். விடியல் விடுதியில் தங்கியுள்ள பெண் தொழிலாளர்களின் தனியுரிமையை உறுதி செய்வதுடன், அவர்கள் கண்ணியம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கும் எந்த தீங்கும் ஏற்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். என பதிவிட்டுள்ளார்...
இதையும் படிங்க: “வீரபாண்டியார் இன்று நம்முடன் இருந்தால்”... ஸ்டாலினுக்கு எதிராக வன்னியர்களை கொம்பு சீவிவிடும் அன்புமணி...!