இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 84. அவர் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தேனி மாவட்டம் அல்லிநகரத்தைச் சேர்ந்த பாரதிராஜா, 1977-ம் ஆண்டு வெளியான '16 வயதினிலே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். அதன் பிறகு 'கிழக்கே போகும் ரயில்', 'சிகப்பு ரோஜாக்கள்' உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களை இயக்கினார்.
அரங்கத்திற்குள் எடுக்கப்பட்டு வந்த தமிழ்த் திரைப்படங்களை வெளிப்புறப் படப்பிடிப்புப் பகுதிகளுக்குக் கொண்டு சென்றவர் என்ற பெருமைக்கு உரியவர். பெரும்பாலும் உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளைப் படம் பிடிப்பவர். இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து மறக்க இயலாத இனிய பாடல்களைத் தந்தவர். ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா போன்ற பல கதாநாயகிகளை அறிமுகம் செய்தவர்.
கடந்த சில வருடங்களாக படங்களில் நடித்து வந்தவர், தனது மகன் மனோஜ் மரணத்திற்கு பிறகு முற்றிலுமாக முடங்கிப் போனார். கடந்த ஒரு சில மாதங்களாக பாரதிராஜா மலேசியாவில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வந்தார். அதன் பிறகு மீண்டும் சென்னை திரும்பினார். இதற்கிடையேதான் கடந்த டிசம்பர் இறுதியில் உடல் நலக்குறைவால் பாரதிராஜா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: "என் அப்பா பாரதிராஜா"..!! தவிக்கிறேன்... நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மனவேதனை..!
தொடர்ந்து மீண்டும் கடந்த ஏப்ரல் மாதம் நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாரதிராஜா தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றார். மேலும், உறுப்பு பாதிப்புகளுக்கான அனைத்து உரிய சிகிச்சைகளும் அவருக்கு அளிக்கப்பட்டு வந்தன. இதிலிருந்து மீண்டு வந்த பாரதிராஜா வீட்டில் தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார். தீவிர நுரையீரல் தொற்றுக்காக பாரதிராஜா வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவு திரை உலகுக்கு பேரிழப்பு. இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் பாரதிராஜாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் கிராமங்களின் காதலையும், உயிரோட்டத்தையும் உங்களைப் போல யாரும் திரையில் காட்டவில்லை என்று கூறினார். உங்கள் படைப்புகள் தலைமுறைகளைத் தாண்டி பலருக்கு ஊக்கமளித்துக் கொண்டே இருக்கும் எனவும் ஏ.ஆர் ரகுமான் தெரிவித்தார். என் இசையை தென்னிந்தியாவின் மிகத் தொலைதூர கிராமங்களுக்குக் கொண்டு சென்றதற்கும், அந்த மக்களின் வாழ்க்கைக் கதைகளை உலகிற்கு அறிமுகப்படுத்தியதற்கும் நன்றி என்றும் அமைதியாக இளைப்பாறுங்கள், பாரதிராஜா எனவும் தனது வேதனையை வெளிப்படுத்தினார்.
இதையும் படிங்க: "அரசு மரியாதையுடன் இயக்குநர் இமயத்திற்கு அஞ்சலி"..! தமிழ்நாடு முதல்வர் விஜய் அறிவிப்பு..!!