குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே ஏர் இந்தியா விமானத்திற்கு சொந்தமான விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்த நிலையில் ஒரே ஒரு பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் மாணவர்கள் தங்கும் விடுதியில், விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்களும் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.

இந்த விபத்து நாடு முழுவதும் பெறும் சோகத்தை ஏற்படுத்தியது. விபத்து நிகழ்ந்த உடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா, விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு உள்ளிட்டோர் நிகழ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து பிரதமர் மோடி சம்பவ இடத்தில் ஆய்வு செய்ததுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதையும் படிங்க: விஜய் ரூபானி ஒரு MAGIC… அவர் இல்லன்னு நெனச்சுக்கூட பார்க்க முடியல! அமித்ஷா உருக்கம்!

போயிங் ரக விமானங்களை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்ட நிலையில் விமான விபத்து தொடர்பாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, டெல்லியில் இருந்து அகமதாபாத் வரும் வரை விமானத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் 650 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து ஏர் இந்தியா விமானம் நொறுங்கியது எனவும் தெரிவித்தார்.

விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு இரண்டு கிலோமீட்டர் தொலைவில் விழுந்து நொறுங்கியுள்ளது என்றும் விமான விபத்தில் மொத்தமாக 270 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்தார். விமான விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி உள்ளதாக வருத்தம் தெரிவித்த ராம் மோகன் நாயுடு, மத்திய மாநில அதிகாரிகள் உள்ளடக்கிய உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் கருப்பு பெட்டியில் உள்ள தகவல்களை மீட்பதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது எனவும் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இது போன்ற பெரும் விபத்துகளை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த அமைச்சர், விமான விபத்து விசாரணை பற்றி அறிக்கை தாக்கல் செய்ய மூன்று மாதங்கள் கெடு விதிக்கப்படுவதாகவும் கூறினார். மேலும், போயிங் டிரீம் லைனர் ரக விமானங்களில் கூடுதல் ஆய்வுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: போயிங் ரக விமானங்களுக்கு செக்.. TOP டூ BOTTOM ஆய்வு செய்ய டிஜிசிஏ அதிரடி உத்தரவு..!