நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள முதுமலை புலிகள் காப்பகம், தமிழ்நாட்டின் முக்கியமான சுற்றுலா மற்றும் வனவிலங்குப் பாதுகாப்பு மையமாக விளங்குகிறது. சுமார் 688 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்துள்ள இந்தக் காப்பகம், அடர்ந்த காடுகள், மலைப் பகுதிகள் மற்றும் பல்வேறு உயிரினங்களின் வாழ்விடமாகத் திகழ்கிறது. புலிகள், யானைகள், கரடிகள், மான் இனங்கள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகளும், சுமார் 260 வகைப் பறவையினங்களும் இங்கு வாழ்கின்றன.
மேலும் ஆசியாவின் மிகப்பெரிய வளர்ப்பு யானைகள் முகாம்களில் ஒன்றான தெப்பக்காடு யானை முகாமும் இங்கு அமைந்துள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் முக்கிய இடமாக இது திகழ்கிறது.தினசரி நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஜீப் சவாரி மூலம் இந்த வனப்பகுதியைச் சுற்றி வருகின்றனர். விலங்குகளை நேரடியாகப் பார்த்து மகிழும் இந்த அனுபவம் பலருக்கு மறக்க முடியாததாக உள்ளது.
ஆனால் சமீப காலமாக சில பார்வையாளர்கள் செல்போன்களை அதிக ஒலியுடன் பயன்படுத்தி, அழைப்புகள் பேசி, வீடியோக்கள் பார்த்து, சமூக ஊடகங்களுக்காகப் பதிவுகள் எடுப்பது வனவிலங்குகளுக்கு பெரும் தொந்தரவை ஏற்படுத்தி வருகிறது. இது அவற்றின் இயல்பான நடவடிக்கைகளுக்கு இடையூறாகவும், அச்சுறுத்தலாகவும் மாறி வருகிறது.இந்த நிலையைக் கருத்தில் கொண்டு, வனத்துறை அதிகாரிகள் முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: குமரியில் வெடிகுண்டு வைத்து கடமான் வேட்டை! 2 பேர் கைது; வனத்துறை நடவடிக்கை!

உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின்படி, மைய வாழ்விட சுற்றுலா மண்டலங்களில் செல்போன் பயன்பாட்டுக்கு இன்று முதல் முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. முதுமலை வனச்சரகர் யுவராஜா இது குறித்து விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில், “சவாரிக்குச் செல்லும் பார்வையாளர்கள் தங்களது செல்போன்களை சவாரி வாகனங்களில் பாதுகாப்பாக ஒப்படைத்துவிட்டு, பயணம் முடிந்தபின் பெற்றுக்கொள்ளலாம். இதனால் வனவிலங்குகளுக்கு ஏற்படும் இடையூறுகள் குறையும். பார்வையாளர்களின் ஒத்துழைப்பே இந்தப் பாதுகாப்பு முயற்சிக்கு பெரும் உதவியாக இருக்கும்” என்றார்.
இந்தத் தடை, இந்தியாவின் பல புலிகள் காப்பகங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் பொதுவான நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். சுற்றுலா மற்றும் பாதுகாப்பை இணைத்து, வனவிலங்குகளின் அமைதியான வாழ்வை உறுதி செய்வதே இதன் நோக்கம். சுற்றுலாப் பயணிகள் இந்த விதியைப் பின்பற்றி, இயற்கையை மதித்து அனுபவிக்க வேண்டும் என்பதே வனத்துறையின் எதிர்பார்ப்பு. முதுமலையின் அழகையும் உயிர்ப்பையும் அடுத்த தலைமுறைக்கும் பாதுகாக்க இந்த முயற்சி உதவும் என நம்பப்படுகிறது.
இதையும் படிங்க: 3 தமிழர்கள் சுட்டுக்கொலை! கர்நாடக வனத்துறையை கண்டித்து சென்னையில் சிபிஐ ஆர்ப்பாட்டம்!