சென்னை: வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ள நிலையில், அது அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கத்தால் தமிழகத்தில் வரும் நாட்களில் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய மேலடுக்கு சுழற்சியின் தாக்கத்தால் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா கடலோரப் பகுதிகளை ஒட்டியுள்ள கடற்பகுதியில் இந்த புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியின் காரணமாக மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அடுத்த சில நாட்களில் இந்தப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் கடல் கொந்தளிப்புடன் காணப்படலாம்.
இதையும் படிங்க: சென்னைக்கு அலர்ட்! 4 மாவட்டங்களில் நாளை கொட்டித்தீர்க்க காத்திருக்கும் கனமழை; 19-ம் தேதி வரை நீடிக்கும் வாய்ப்பு!
இதையடுத்து, ஆகஸ்ட் 18-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே கடலுக்குச் சென்றுள்ள மீனவர்கள் பாதுகாப்பாக கரை திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மழை எப்படி?
தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப்பாதையின் தாக்கத்தால், இன்று முதல் ஆகஸ்ட் 21-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் இதர பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வலுப்பெறும் நிலையில், பருவமழை செயல்பாடுகள் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் மீனவர்கள் வானிலை அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்க வேண்டியது அவசியம்.
இதையும் படிங்க: தமிழகத்தில் மீண்டும் கனமழை எச்சரிக்கை! ஆகஸ்ட் 17ல் 4 மாவட்டம், ஆகஸ்ட் 19ல் 5 மாவட்டங்களுக்கு அலர்ட்!