தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக தற்போதுள்ள கூட்டணியை தக்கவைத்து தேர்தலை எதிர்கொள்ள காய் நகர்த்தி வருகிறது. அதிமுக முதல் கட்டமாக பாஜகவோடு கூட்டணியை உறுதி செய்துள்ளது. அடுத்ததாக பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை இணைக்க திட்டமிட்டு வருகிறது. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வழக்கம் போல தனித்து தான் போட்டி என அறிவித்துவிட்டார்.
இதனிடையே 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என அறிவித்துள்ள விஜய் இதற்கான பணிகளை தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில் சென்னையில் நேற்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

சட்டமன்றத் தேர்தலில் தவெக-வின் முதலமைச்சர் வேட்பாளராக விஜய் அறிவிக்கப்பட்டார். ஆகஸ்ட் 2025-ல் தவெக-வின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறும். செப்டம்பர் முதல் டிசம்பர் 2025 வரை தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். தமிழ்நாடு முழுவதும் 12,500 கொள்கை விளக்க கூட்டங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஓரணியில் தமிழ்நாடு: வீடு வீடாக சென்று பரப்புரையை தொடங்கியது திமுக..!
எனவே தமிழகத்தில் 4 முனை போட்டி என்பது உறுதியாகி உள்ளது. இதனையடுத்து திமுக, அதிமுக, நாதக, தவெக கட்சிகள் தங்களது தேர்தல் பணியை முடுக்கிவிட்டுள்ளது. 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் புதிய வியூகங்கள் வகுத்து வாக்காளர்களை சந்திக்க வேண்டும் என்பதில் முன்னணி கட்சிகள் தீவிரமாக உள்ளன. இந்த நிலையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரசார இயக்கத்தை திமுக ஜூலை 1ல் துவங்கியது.

அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.,க்கள், மாவட்டச் செயலர்கள் முதல் ஓட்டுச்சாவடி முகவர்கள் வரை வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து, பிரசாரம் செய்து வருகின்றனர். பொதுவாக, ஆளுங்கட்சி தனது ஆட்சியின் சாதனைகளை முன்வைத்தும் பிரதான எதிர்க்கட்சியை விமர்சித்தும்தான் பிரசாரம் செய்யும். ஆனால் மத்திய பா.ஜ., அரசை மட்டுமே விமர்சித்து, தேர்தல் பிரசாரத்தை தி.மு.க., துவங்கி உள்ளது. இதற்காக, ஆறு கேள்விகள் அடங்கிய படிவத்தை தி.மு.க., தயாரித்துள்ளது.
அதை மக்களிடம் கொடுத்து ஆம், இல்லை என பதிலை பெற்று வருகின்றனர். தமிழகத்தின் மண், மொழி, மானம் காப்பாற்றப்பட வேண்டும் என நினைக்கிறீர்களா? நீட் போன்ற தேர்வுகளில் நம் இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமா? டில்லியின் அதிகாரத்திற்கு அடிபணியாமல், தமிழகத்தின் உரிமையை காக்கும் முதல்வர் நம் மாநிலத்தை ஆள வேண்டுமா? என கேள்விகள் அனைத்தும் பஜாவை வில்லனாக சித்தரிப்பது போல உருவாக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும்படி பொதுமக்களிடம் தி.மு.க.,வினர் வற்புறுத்தி வருகின்றனர். இதற்கெல்லாம் ஒரே காரணம் சிறுபான்மையினர் ஓட்டுகள் தான் என்கிறது திமுக வட்டாரம். ஜெயலலிதா மறைவுக்குப் பின், பா.ஜ., எதிர்ப்பு தான் தமிழக அரசின் முக்கிய அம்சமாக உள்ளது. பாஜக எதிர்ப்பில் தீவிரம் காட்டியதால்தான், 2019, 2024 லோக்சபா தேர்தல், 2021 சட்டசபை தேர்தல்களில், தி.மு.க., கூட்டணி பெரும் வெற்றியை பெற்றது. அது மட்டுமல்லாது, பா.ஜ.,வை தீவிரமாக எதிர்ப்பதால், சிறுபான்மையினர் ஓட்டுகள் மொத்தமாக கிடைக்க வழிவகுக்கும்.

மும்மொழிக் கொள்கை, நீட் தேர்வு எதிர்ப்பு, தமிழகத்திற்கு நிதி மறுப்பு ஆகிய விவகாரங்கள், தேர்தலில் பெரும் பயன் தரும் என, தி.மு.க., தலைமை நினைக்கிறது. எனவே, வரும் சட்டசபை தேர்தலும், அதே பா.ஜ., எதிர்ப்பு உத்தியை, முதல்வர் ஸ்டாலின் கையிலெடுத்துள்ளார் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: பறிபோன நகராட்சி தலைவர் பதவி.. சங்கரன்கோவிலில் சலசலப்பு.. பின்னணி என்ன..?