தமிழக சட்டபையில் இன்று 4வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. இதில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்பசபையில் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார்.
முதலமைச்சர் கொண்டு வரும் தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துளை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், பாஜக எம்எல்ஏ போஜராஜன் சட்டசபையில் பேசியதாவது:-இந்த அவசரம் எதற்காக என்று எனக்குப் புரியவில்லை. இன்னும் சில உறுப்பினர்கள் சொன்னதைப் போல், ஒரு முன்விடிவுக் காலகட்டத்தில்தான் அந்தப் பரிசீலனை நிலை இருக்கிறது. ஆனால், மாற்றம் ஒன்றுதான் நிரந்தரம். "Changes are only permanent."
அந்த மாற்றத்தை மக்கள் விரும்பியதால்தான் இன்று நீங்கள் அனைவரும் அமைச்சரவையில் இருக்கிறீர்கள். ஆனால், காலப்போக்கில் தேவையான மாற்றத்தை, ஆக்கப்பூர்வமான மாற்றத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: FCRA மசோதாவுக்கு எதிராக தனி தீர்மானம் தவெக-வின் நாடகம்! பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம்!
சிலர் சொன்னார்கள், 550 பேர் அமரக்கூடிய ஒரு மண்டபத்தை சபையாகக் கட்டியிருக்கிறார்கள் என்று. நம்முடைய ராமச்சந்திரன் சகோதரர் ஒரு வீடு கட்டினால், அவரும் அவருடைய மனைவியும் மட்டுமே வசிப்பதற்காக ஒரு வீடு கட்டமாட்டார். நாளை அவர்களுடைய குழந்தைகள் வருவார்கள் என்பதற்காக நான்கைந்து அறைகள் கட்டுவார். அவர் ஏதோ கணக்குப் போட்டு கட்டுகிறார் என்பது அல்ல; எதிர்கால வளர்ச்சிக்காகவும், எதிர்காலத் தேவைக்காகவும்தான் கட்டுகிறார்.
அன்றைக்கு இடித்துவிட்டு மீண்டும் கட்டிக்கொண்டிருக்க முடியாது. அதனால், ஒரு திட்டம் என்பது எதிர்காலத்தை நினைத்துதான் இருக்க வேண்டும். அடுத்த தேர்தலை நாங்கள் நினைப்பதில்லை; அடுத்த தலைமுறையை, அடுத்த ஜெனரேஷனை நாங்கள் நினைக்கிறோம். அதனால், அந்தக் காலகட்டத்தில் தேவைப்படும் என்பதற்காகவே அவர்கள் அந்த மாதிரியான ஒரு நிலைமையை உருவாக்கியிருக்கிறார்கள்.
அதற்கு உள்நோக்கம் இருப்பதாகவோ, ஒரு வெஸ்டட் இன்ட்ரஸ்ட் இருப்பதாகவோ, அவர்களை களங்கப்படுத்துகின்ற வகையிலோ தயவுசெய்து மாண்புமிகு உறுப்பினர்கள் கருத்துகளைத் தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இன்றைக்கு நாம் என்ன செய்கிறோம்? ஊராட்சி மன்றங்களைப் பிரிக்கிறோம். அதேபோல், ஊராட்சி மன்றங்களைப் பேரூராட்சிகளாக மாற்றுகிறோம்; பேரூராட்சிகளை நகராட்சிகளாக மாற்றுகிறோம். இந்த மாதிரி ஏன் செய்கிறோம்? நிர்வாக வசதிக்காகவும், அடிப்படை வசதிகள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதற்காகவும்தான் இதைச் செய்கிறோம்.
என்னுடைய தொகுதியை எடுத்துக்கொண்டால்கூட, நீலகிரியில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்றால், நான்கு மாவட்டங்கள் அடங்கிய ஒரு தொகுதியாக இருக்கிறது. நீலகிரி, ஈரோடு, திருப்பூர் போன்ற நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய ஒரு நாடாளுமன்றத் தொகுதி இருக்கிறது.
அந்த நான்கு மாவட்டங்களுக்கும் சென்று பார்ப்பது, நிர்வாகம் செய்வது, மக்கள் தொகை அதிகரிக்கும்போது அனைத்தையும் கவனிப்பது என்பது சிரமமானதாக இருக்கும். எனவே, நிச்சயமாக அதை இன்னும் கொஞ்சம் பிரித்துச் செய்யும்போது, மக்களுக்கு நல்ல சேவை செய்கின்ற வாய்ப்புகள் கிடைக்கும்.
நல்ல ஒரு எதிர்காலத்தை நினைத்துத்தான் இந்த மாதிரியான திட்டங்களைத் தீட்டியிருக்கிறார்கள். அதில் ஒரு கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். எந்தக் காரணத்தைக் கொண்டும் தமிழகத்திற்கு ஒரு இழப்பு ஏற்படக்கூடாது. அந்த வகையில், நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்த நிலைப்பாட்டை எடுத்து, தமிழகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு, இங்கு கட்சி வேறுபாடு இல்லாமல் அந்த நிலை வரும்போது அனைவரும் அமர்ந்து மத்திய அரசிடம், "இந்த மாதிரி இருக்கிறது; எங்களுக்கு இழப்பு வரக்கூடாது, எங்கள் மக்களுக்கு இழப்பு ஏற்படக்கூடாது" என்பதை உணர்த்திச் செயல்பட்டால் அதில் தவறு இல்லை.
ஆகவே, இவ்வளவு அவசரப்பட்டு ஒரு தீர்மானத்தைக் கொண்டு வருவதை எங்களுடைய பாரதிய ஜனதா கட்சி ஏற்றுக்கொள்வதில்லை. ஆகவே, இந்தத் தீர்மானத்தை நாங்கள் எதிர்க்கின்றோம்.
இதையும் படிங்க: 'மிஸ்டு கால்' மூலம் உறுப்பினர் சேர்க்கை! அண்ணாமலையின் 'வீ தி லீடர்ஸ்' உறுப்பினர் சேர்க்கையில் புதிய முறை!