தமிழகத்தில் தொடரும் மின்வெட்டுப் பிரச்சினைகளால் தாய்மார்களும் உழைக்கும் மக்களும் இரவில் நிம்மதியாகத் தூங்கக்கூட வழியின்றி குழந்தைகளுடன் தவித்து வருவதாகவும், இதற்குக் காரணமான தவெக அரசின் நிர்வாகத் தோல்வி கண்டிக்கத்தக்கது என்றும் பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் அத்திப்பட்டு மற்றும் சென்னை கொருக்குப்பேட்டை பகுதிகளில் நீண்ட நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் தெருவில் இறங்கிப் போராடும் சூழல் உருவானதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், போர்க்கால அடிப்படையில் தடையில்லா மின்சாரம் மற்றும் குடிநீர் வசதியை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தமிழகம் முழுவதும் மின்வெட்டுப் பிரச்சினைகளால் பொதுமக்களும் முதியவர்களும் அன்றாடம் வீதிக்கு வந்து போராடும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். லேசான காற்று வீசினாலே மின் விநியோகம் நிறுத்தப்படுவதால் மோட்டார்கள் இயங்காமல் குடிநீரின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இது தொடர்பாகப் புகார் அளிக்க மின்வாரியத்தைத் தொடர்பு கொண்டால், அதிகாரிகள் தொலைபேசிகளை அணைத்து வைத்துவிட்டு மக்களை அலைக்கழிக்கும் பொறுப்பற்ற போக்கைக் கடைப்பிடிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: உரிமைக்காக போராடிய விவசாயிகள் கைது! தவெக அரசை கண்டித்து கனிமொழி எம்.பி ஆவேசம்!
பகலெல்லாம் கூலி வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும் ஏழை எளிய மக்கள், இரவில் நிம்மதியாக உறங்கக்கூட வழியின்றி குழந்தைகளுடன் பரிதவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அடிப்படை வசதிகளைக் கூட செய்து தராமல் மக்களை வீதிக்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட நயினார் நாகேந்திரன், முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு உடனடியாக விழித்துக்கொண்டு, தமிழகம் முழுவதும் தடையற்ற மின்சார விநியோகத்தையும் சீரான குடிநீர் விநியோகத்தையும் உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: மேட்டூர் அணை தாமத திறப்பால் 12 லட்சம் டன் நெல் இழப்பு! தவெக அரசை சாடும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!