மதுரை ஆதீனத்தின் 293-வது பீடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், சென்னை சைவ மாநாட்டில் கலந்து கொள்ள கடந்த மே 2ம் தேதி உளுந்தூர்பேட்டை வழியாக சென்று கொண்டு இருந்தார். அஜீஸ் நகர் ரவுண்டானா பகுதியில் பிரிவு சாலை வழியாக கடக்க முயன்ற போது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் மோதியது. நல்வாய்ப்பாக யாருக்கும் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. மதுரை ஆதீனம் தன்னை கொலை செய்ய சதி நடந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். கள்ளக்குறிச்சி போலீசார் இது தொடர்பாக விசாரித்து விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிட்டனர்.

மதுரை ஆதீனத்தின் கார் விபத்தில் சிக்கியது சாதாரண விபத்து மட்டுமே, கொலைக்கான எந்த சதியும் நடக்கவில்லை என்றும் விளக்கம் அளித்தனர். மதுரை ஆதீனம் கார் விபத்து தொடர்பாக, பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை ஆதினத்தை கொல்ல சதி நடப்பதாக கூறுவது பொய் என கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பெத்த தாய்க்கு தான் வலி தெரியும்...கவலை படாதீங்க அம்மா...அஜித் தாயாருக்கு எடப்பாடி ஆறுதல்!
உளுந்துார்பேட்டையில் நடந்த விபத்து தொடர்பாக, போலீஸ் வெளியிட்ட அறிக்கை உண்மைக்கு புறம்பானது; ஒரு தரப்பாக இருக்கிறது. எதிர்த்தரப்பு வாகனத்தை பற்றியும், தடுப்புகளை தாண்டி வந்து அவர்கள் மோதியது பற்றியும், பதிவு எண் பொருத்தப்படாத வாகனம் என்று குற்றம் சாட்டியது பற்றியும் போலீஸ் அறிக்கையில் குறிப்பிடாதது வருத்தம் அளிக்கிறது என்று மதுரை ஆதீனம் தெரிவித்திருந்தார்.

இதனிடையே சென்னையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மதுரை ஆதீனம், சிலர் தன்னுடைய காரின் மீது மோதுவது போல் வந்து திட்டமிட்டு தன்னை கொலை செய்ய முயற்சித்ததாகவும், குல்லா அணிந்த நபர்கள் தன்னை தாக்குவதற்கு முயற்சித்ததாகவும் மதுரை ஆதீனம் கூறியிருந்தார். மேலும் அவருடைய உதவியாளரும் மதுரை ஆதீனத்தின் இதே கருத்தை வெளிப்படுத்தினார்.
இதனைத்தொடர்ந்து அயனாவரத்தைச் சார்ந்த வழக்கறிஞர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், சென்னை காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தியது. அதைத் தொடர்ந்து சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசாருக்கு வழக்கு மாற்றப்பட்டது. அவர்கள் மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல், இரு வேறு சமூகங்களுக்கு இடையில் பகைமையை உண்டாக்கும் வகையில் செயல்படுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், தவறான தகவல்களை பரப்புதல் என நான்கு பிரிவுகள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து விசாரணைக்காக ஆஜராகுமாறு சைபர் கிரைம் போலீசார் மதுரை ஆதீனத்திற்கு கடந்த ஜூன் 29ம் தேதி சம்மன் அனுப்பினர். ஆனால் ஆதீனம் ஆஜராகவில்லை. இந்நிலையில் சென்னை கிழக்கு சைபர் கிரைம் காவல்துறையினர் இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளனர். இரண்டாவது சம்மன் வரும் 5ம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு, தமிழ்நாட்டின் ஆன்மிக மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: எங்களுக்குள் எந்த மனக்கசப்பும் இல்லை.. பூதாகரமாக வெடித்த பிரச்சனை.. ஃபுல் ஸ்டாப் வைத்த டி.கே சிவக்குமார்..!