சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை ₹842 கோடி மதிப்பீட்டில் உலகத்தரம் வாய்ந்த முனையமாக மாற்றும் மறுசீரமைப்புப் பணிகளின் ஒரு முக்கியப் பகுதியாக, அதிநவீன பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் (Multi-Level Car Parking - MLCP) பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயின் (Southern Railway) சென்னை கோட்டம் காந்தி-இர்வின் சாலைப் பகுதியில் அமைத்துள்ள இந்த புதிய வசதி, நிலையப் பகுதியில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசலைக் கணிசமாகக் குறைத்து பயணிகளுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
தென்னிந்தியாவின் மிக பரபரப்பான ரயில் முனையங்களில் ஒன்றான சென்னை எழும்பூர், தினசரி லட்சக்கணக்கான பயணிகளைக் கையாண்டு வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் போதிய வாகன நிறுத்துமிட வசதி இல்லாததால், நிலையத்தைச் சுற்றியுள்ள சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இந்த நீண்டகாலப் பிரச்சினைக்குத் தொழில்நுட்ப ரீதியான தீர்வாக, பாதுகாப்பான மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய இந்த பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் தற்போதைய மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.

காந்தி-இர்வின் சாலைப் பகுதியில் உள்ள பல்நோக்கு வளாகத்தில் (Multi-Functional Complex - MFC) இந்த வாகன நிறுத்துமிடம் தகுந்த இடவசதியுடன் வரிசைக்கிரமமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தலா 3,442.13 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்த இரண்டு தளங்களிலும் சேர்த்து மொத்தம் 122 நான்கு சக்கர வாகனங்கள் (Cars) மற்றும் 68 இருசக்கர வாகனங்களை (Two-wheelers) நிறுத்த முடியும். 2,842.13 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் தளத்தில் 62 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 34 இருசக்கர வாகனங்களுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. இந்த முறையான உள்கட்டமைப்பால், சாலை ஓரங்களில் கண்டபடி வாகனங்கள் நிறுத்தப்படுவது தவிக்கப்பட்டு, நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து தடையின்றி நடைபெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு.. 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
இந்த நவீன வாகன நிறுத்துமிட வளாகத்தில் பயணிகளின் தற்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு பல்வேறு அதிநவீன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. சுற்றுச்சூழல் விழிப்புணர்வின் ஒரு பகுதியாக 22 மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 4x7 சிசிடிவி (CCTV) கண்காணிப்பு கேமராக்கள், தானியங்கி வாகன மேலாண்மை அமைப்புகள் மற்றும் மேம்பட்ட தீயணைப்பு பாதுகாப்பு வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளன. ஓட்டுநர்களுக்கான ஓய்வறைகள், ஸ்மார்ட் லாக்கர் (Smart Locker) வசதிகள், வாகன மெருகூட்டல் (Vehicle Detailing) சேவைகள் மற்றும் சிற்றுண்டி நிலையங்கள் போன்ற கூடுதல் வசதிகளும் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்பு மற்றும் எளிதான அணுகுமுறைக்கு இந்த வளாகத்தில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சறுக்காத தரைத்தளம், பாதுகாப்பு கைப்பிடிகள் மற்றும் பிரத்யேக அவசரகால வெளியேற்றப் படிக்கட்டுகள் இதில் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் (Divyangjan) எவ்வித சிரமமும் இன்றி எளிதாகப் பயன்படுத்தும் வகையில், ஒரே நேரத்தில் 20 பயணிகள் பயணிக்கும் திறன் கொண்ட நவீன மின்தூக்கி (Lift) வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆர்த்தி ரவிக்கு எதிராக அவதூறு பேசக் கெனிஷாவுக்குத் தடை - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!