சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி குச்சிப்பாளையம் கிராமம். இங்கு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயம் உள்ளது. இந்த கோயிலில் நேற்று மாலை தீமிதி திருவிழா நடைபெற்றது.
தீமிதி திருவிழா முடிந்து பெரும்பாலான பக்தர்கள் வீடுகளுக்கு சென்று விட்டனர். பின்னர் எஞ்சியிருந்த சுமார் 100 பேர் கோயிலுக்குள் சென்று சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பெண்கள் அந்த இடத்தில் மாவிளக்கு போட்டனர். அந்த நேரத்தில் இரவு வான வேடிக்கை நிகழ்ச்சிக்காக கோயிலில் உள்ளே ஒரு ஓரமாக பட்டாசுகள் மற்றும் நாட்டு வெடிகள் வைக்கப்பட்டிருந்தது.
அப்போது திடீரென வெடிமீது ஒரு தீப்பொறி பட்டது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த நாட்டுவெடி மற்றும் பட்டாசுகள் பலத்த தீப்பொறியுடன் வெடித்து சிதறியது. இதனால் கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்வதற்காக காத்திருந்த சிறுவர்கள் பெண்கள் என பலரும் படுகாயமடைந்தனர். அவர்கள் அலறி அடித்துக் கொண்டு கோயிலை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
இதையும் படிங்க: அடுத்த அதிர்ச்சி...!! - பயிற்சி மையத்தில் கொளுந்துவிட்டு எரிந்த தீ... பலி எண்ணிக்கை கிடுகிடுவென உயர்வு...!
இதைத்தொடர்ந்து வெடி விபத்தில் காயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தகவல் அறிந்த கிள்ளை போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று சேர்ந்தனர்.
பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மருத்துவ க்கல்லூரி மருத்துவமனையில் 16 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஒரு பெண் உள்ளிட்ட இருவர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். கிள்ளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருவர் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர்.
படுகாயமடைந்த வர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் தொகுதி எம்எல்ஏவும் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவருமான தமிமுன் அன்சாரி உடனடியாக மருத்துவமனைக்கு வந்தார். பின்னர் வெடி விபத்தில் படுகாயமடைந்தவர்களை நேரில் பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறினார். போலீசாரும் மருத்துவமனைக்கு வந்து காயமடைந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இந்த விபத்து பற்றி கூறிய காயமடைந்தவர், கோயில் திருவிழாவில் இரவு வான வேடிக்கை நடத்துவதற்காக வெடி வாங்கி கோயிலுக்குள் வைத்திருந்தார்கள். சாமிக்கு தீபாராதனை காண்பிக்கும்போது திடீரென அதில் ஒரு பொறி பட்டு வெடிகள் வெடித்துச் சிறியது. இதனால் பலரும் படுகாயமடைந்தனர் என கூறினார்.
காயமடைந்தவர்களை மருத்துவமனையில் பார்த்து ஆறுதல் கூறியபின் சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி செய்தியாளர்களிடம் கூறுகையில், சிதம்பரம் அருகே கிள்கள குச்சிப்பாளையம் பகுதியில் இன்று மாலை நடைபெற்ற கோயில் திருவிழாவில் ஏற்பட்ட வெடி விபத்தினால் பலரும் படுகாயமடைந்து இருக்கிறார்கள். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவரை 16 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இதில் 11 வயது நிரம்பிய சிறுவன் ஒருவன் நிலை மட்டும் சற்று கவலை கவலைக்கிடமாக இருக்கிறது. ஒரு பெண் படுகாயமடைந்து தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு இருக்கிறார்.
மற்றபடி இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் காயமடைந்தவர்களுக்கு நல்ல சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த மருத்துவக் கல்லூரியில் மேலும் சில வசதிகள் குறைவாக இருக்கிறது. இது குறித்து விரைவில் துறை அமைச்சரை சந்தித்து முக்கிய வசதிகளை ஏற்படுத்த முறையிட உள்ளேன் என்றார்.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் சோக சம்பவம்..!! தீயில் கருகி நாசமான 8 கடைகள்..!! கதறும் வியாபாரிகள்..!!