நடப்பு 2026-ஆம் ஆண்டு காரீப் பருவச் சாகுபடிக்குத் தமிழ்நாட்டிற்குத் தேவைப்படும் அத்தியாவசிய உரங்களை எவ்விதத் தங்கு தடையுமின்றி போர்க்கால அடிப்படையில் முழுமையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழைக் காலம் தொடங்கவுள்ளதை அடுத்து, மாநிலம் முழுவதும் நடப்பாண்டிற்கான காரீப் (Kharif Season) பருவச் சாகுபடிப் பணிகளைத் தொடங்கத் தமிழக விவசாயிகள் மிகத் தீவிரமாக ஆயத்தமாகி வருகின்றனர். இந்தச் சூழலில், விவசாயப் பணிகளுக்கு மிக அத்தியாவசியத் தேவையான யூரியா, டிஏபி (DAP), பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட உரங்கள் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தனியார் கடைகளில் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்யப் புதிய தவெக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்திடமிருந்து தமிழ்நாட்டிற்கு முறைப்படி கிடைக்க வேண்டிய உரங்களின் பங்கீட்டைத் துரிதப்படுத்தக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று ஒரு முக்கியக் கடிதத்தை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், "தமிழகத்தில் காரீப் பருவத்தில் நெல், கரும்பு, பருத்தி மற்றும் சிறுதானியங்கள் உள்ளிட்ட பயிர்கள் பெருமளவில் சாகுபடி செய்யப்பட உள்ளன. விவசாயிகளின் தேவையைப் பூர்த்தி செய்ய இம்முறை கூடுதல் உரங்கள் தேவைப்படுவதால், மத்திய அரசு தமிழ்நாட்டிற்கான உர ஒதுக்கீட்டை எவ்விதத் தொய்வுமின்றி தங்கு தடையின்றி வழங்கத் தனி கவனம் செலுத்த வேண்டும்" என்று முதலமைச்சர் விஜய் மிக அழுத்தமாக வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: முழு அமைச்சரவை எங்கே?: முதலமைச்சர் விஜய்யை சாடி பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை!
மாநிலத்தில் புதிய தவெக அரசு பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், மத்திய பாஜக அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு உரம் வழங்கக் கோரி முதலமைச்சர் விஜய் அனுப்பியுள்ள இந்த முதல் அதிகாரப்பூர்வக் கடிதம், அரசியல் மற்றும் உழவர் வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: "நெல் கொள்முதல் நிலைய லஞ்ச ஒழிப்புக்கு அதிரடி உத்தரவு": இடைத்தரகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் சாட்டை!