தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று பிரம்மாண்டப் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துடனான தனது நட்பை நினைவு கூர்ந்தவர், அவரது மகன் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக உருக்கமாக வாக்குச் சேகரித்தார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனுக்கு முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட முதல்வர்: திரைப்படம் ஒன்றில் வேட்பாளராக நடித்த விஜயகாந்திற்கு ஆதரவாக அன்று நான் பாட்டுப் பாடி வாக்குச் சேகரித்தேன். இன்று நிஜத் தேர்தலில் அவரது மகனுக்கு ஆதரவாக வந்து நிற்கிறேன் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். விஜயகாந்தின் உடலை அடக்கம் செய்ய இடம் கொடுக்க மறுத்ததாகக் கிளப்பப்படும் வாட்ஸ்அப் வதந்திகளைச் சங்கி கூட்டத்தின் வாந்தி எனச் சாடினார். கலைஞர் முன்னின்று சகல மரியாதைகளுடன் அந்தப் பணியைச் செய்ததை நினைவு கூர்ந்தார்.

எடப்பாடி பழனிசாமி (EPS) என்று சொன்னாலே அதற்குப் பொய் மற்றும் பித்தலாட்டம் என்றுதான் பொருள் என முதல்வர் விமர்சித்தார். வேளாண் சட்டங்களை ஆதரித்து விவசாயிகளுக்கும், சிஏஏ (CAA) சட்டத்தை ஆதரித்துச் சிறுபான்மையினருக்கும், சசிகலா, ஓபிஎஸ் ஆகியோருக்கும் துரோகம் செய்தவர் எடப்பாடி எனச் சாடினார். பாஜக-வுடன் கூட்டணி வைத்துத் தமிழகத்திற்குத் துரோகம் இழைத்தவர் பழனிசாமி என்றும், அவர் சொல்லும் பொய்களை வைத்து ஒரு புத்தகமே போடலாம் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: பிரிட்ஜ்க்கு பதிலா வாஷிங் மெஷின்...! எடப்பாடியை கிண்டலடித்த MP கனிமொழி..!!
திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையை 'சூப்பர் ஸ்டார்' என வர்ணித்த முதல்வர் ஸ்டாலின், "சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டால் சின்ன குழந்தையும் சொல்லும்... அதேபோல் இந்தத் தேர்தலின் சூப்பர் ஸ்டார் திமுக-வின் தேர்தல் அறிக்கைதான்" எனப் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டத்திற்காகச் செய்த சாதனைகளை முதல்வர் பட்டியலிட்டார்: சிவகாசி புதிய பேருந்து நிலையம், சாட்சியாபுரத்தில் புதிய ரயில் மேம்பாலம், 40,000 பேருக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாக்கள். விருதுநகரில் ஒருங்கிணைந்த ஆயத்த ஆடைகள் பூங்கா, திருச்சுழி மற்றும் அருப்புக்கோட்டையில் உணவுப் பூங்காக்கள், மாவட்டத் தலைமை மருத்துவமனையாக மேம்படுத்தப்படும் அருப்புக்கோட்டை மருத்துவமனை.
விருதுநகர் மாவட்ட வேட்பாளர்களான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கடற்கரை ராஜ், தங்கப்பாண்டி, சிவகாசி அசோகன் (கை சின்னம்), ஸ்ரீவில்லிபுத்தூர் சிபிஐ வேட்பாளர் மகாலிங்கம் (கதிர் அரிவாள்) ஆகியோருக்கு உதயசூரியன் மற்றும் கூட்டணிக் கட்சிச் சின்னங்களில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: DMK vs TVK..! விஜயை எதிர்த்து..!! திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் வேட்பு மனுத் தாக்கல்..!