குற்றால அருவிகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யச் சிறப்பு கண்காணிப்புக் குழுவை அமைத்துத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியருக்குச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தென்காசியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், பிரசித்தி பெற்ற குற்றால அருவிகளுக்கு ஆண்டுதோறும் சீசன் காலத்தில் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும், காசி விசுவநாதர் கோயில் பக்தர்களும் வந்து செல்கின்றனர். எனவே, இங்கு வரும் பொதுமக்களுக்குப் போதிய பாதுகாப்பு, அடிப்படை சுகாதார வசதிகளை ஏற்படுத்தவும், சட்டவிரோத செயல்களைத் தடுக்கவும் உத்தரவிட வேண்டும் எனத் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தென்காசி மாவட்ட ஆட்சியர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், குற்றாலநாதசுவாமி கோயில் மற்றும் அருவியைச் சுற்றியுள்ள 152 தற்காலிக கடைகளில் 72 கடைகள் பாதுகாப்பு கருதி அகற்றப்படும். தீ விபத்து ஏற்பட்ட தெற்கு வெளிப்பிரகார பகுதியில் இருந்த 62 கடைகள் அகற்றப்பட்டு நந்தவனம் அமைக்கப்படும். அனுமதிக்கப்படும் 80 கடைகளில் எரிவாயு சிலிண்டர் மற்றும் விறகு பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கொளத்தூரில் திமுக புகார் நிரூபிக்கப்படவில்லை! தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு அதிரடி பேட்டி!
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரங்களில் குளிக்க வரும் சுற்றுலாப் பயணிகளின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் இருப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். அருவிப் பகுதிகளில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களோ அல்லது சிலிண்டர்களோ பயன்படுத்தப்படவில்லை என்பதை ஆட்சியர் உறுதிப்படுத்த வேண்டும். தற்சமயம் சீசன் தொடங்கியுள்ளதால், கூட்ட நெரிசல், மருத்துவ வசதி, போக்குவரத்து மற்றும் தீ தடுப்பு பணிகளைக் கண்காணிக்கச் சிறப்பு கண்காணிப்புக் குழுவை அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் ஆகஸ்ட் 24-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: வருவாயை விட மக்கள் நலனே முக்கியம்! டாஸ்மாக் ஆன்லைன் முன்பதிவு திட்டத்திற்கு டிடிவி தினகரன் கண்டனம்!