தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தும் மாநில அரசின் முடிவிற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உணவகங்களுடன் கூடிய மதுபானக் கூடங்கள் மற்றும் டாஸ்மாக் கடைகளைத் தனியார் மயமாக்குதல் போன்ற முடிவுகளை ஊடகங்கள் மூலம் கசியவிட்டு, பொதுமக்களின் எதிர்ப்பால் பின்வாங்கிய தவெக அரசு, தற்போது ஆன்லைன் முன்பதிவு என்ற மற்றொரு தவறான முடிவை எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: இனி டாஸ்மாக் மதுபானம் வாங்க ஆன்லைன் போதும்! நாளை முதல் புதிய சேவை!!

மதுப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்துப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அரசு நிர்வாகமே, மது வாங்குவதற்கான நடைமுறையை எளிமைப்படுத்தி அதை ஊக்குவிப்பதும், அதன் மூலம் வருவாயைப் பெருக்க நினைப்பதும் சமூக நலனுக்கு முற்றிலும் எதிரானது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே, மதுபானங்கள் மூலம் கிடைக்கும் வருவாயை விட மக்களின் நல்வாழ்வே மிக முக்கியம் என்பதை உணர்ந்து, டாஸ்மாக் கடைகளில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து மதுபானங்களைப் பெறும் நடைமுறையைத் தமிழக அரசும் டாஸ்மாக் நிர்வாகமும் உடனடியாகக் கைவிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: சூடு பிடிக்கிறது டாஸ்மாக் முறைகேடு வழக்கு! ஐஏஎஸ் அதிகாரி விசாகனை நெருங்கும் போலீஸ்! விசாரணை தீவிரம்!