தமிழ்நாடு முழுவதும் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட சேவைகள் வழங்க லஞ்சம் பெறப்படுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். முன்னதாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் அருகே இருந்த ஓட்டுநர் பயிற்சி பள்ளி வாகனங்கள் அனைத்தும் அலுவலக வளாகத்திற்குள் கொண்டுவரப்பட்டது.
தொடர்ந்து அலுவலக நுழைவு வாயில் பூட்டப்பட்டு, ஓட்டுநர் பயிற்சி பள்ளி வாகனங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர். மேலும் அலுவலகத்திலும் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.63,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல், நெல்லை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அதிக அளவில் அலுவலர்கள் லஞ்சம் வாங்குவதாக தொடர்ச்சியாக நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்துள்ளது. அதைத் தொடர்ந்து இன்று மதியம் 12:15 மணிக்கு நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீரென்று நெல்லை என் ஜி ஓ காலனி பகுதியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குள் புகுந்து சோதனையில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: தமிழக முழுவதும் மாஸ் ரெய்டு... ஆர்.டி.ஓ. அலுவலகங்களுக்குள் அதிரடியாய் நுழைந்த லஞ்ச ஒழிப்புத்துறை... சிக்கியது என்ன?
அப்போது அங்கிருந்த அலுவலர்களிடம் தனித்தனியாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தினர். திடீரென்று மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் சுமார் 45 நிமிடத்திற்கு மேல் மின்சாரம் வராததால் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தங்கள் கைகளில் உள்ள செல்போன்களில் உள்ள லைட்டுகளை பயன்படுத்தி அறைகளின் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
இதனால் முறையாக லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்ய முடியாமல் சிறிது நேரம் திணறும் நிலை ஏற்பட்டிருந்தது. மின்சாரம் 45 நிமிடத்திற்கு பிறகு சரி செய்யப்பட்ட நிலையில் மீண்டும் சோதனையை லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடக்கி உள்ளனர். கணக்கில் வராத பணம் யாரிடமாவது இருக்கிறதா என்பது குறித்தும் லஞ்ச ஒழிப்பு துறையினர் போக்குவரத்து அலுவலகம் முழுவதும் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் வழக்கத்திற்கும் மாறாக வட்டார போக்குவரத்து அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது.
7 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சோதனையின் அடிப்படையில் 7 புரோக்கர்கள் ,1 டிரைவிங் ஸ்கூல் பணியாளர் என 8 பேரிடம் மொத்தம் கணக்கில் வராத பணம் 92 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையினர் இரு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மருத்துவமனைக்கு கணவரைப் பார்க்க வந்த இடத்தில் நேர்ந்த கொடூரம்; ஓமந்தூரார் நுழைவு வாயில் இடிந்து விபத்து!