கோவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான ஜீவா இல்லத்திற்கு அக்கட்சியில் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் : சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவை விட அதிக நாட்கள் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியை குடியரசுத் தலைவரும், துணைத் தலைவரும் பாராட்டுவதில் எங்களுக்குப் பிரச்சைனையில்லை. ஆனால், நாட்டின் தற்போதைய சீரழிவுகளுக்கு நேருதான் காரணம் என பாஜாகவினர் வசைபாடுவது ஏற்புடையதல்ல. இந்தியாவில் இன்று பல்லாட்சி முறை நிலவுவதற்கும், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் விண்வெளி ஆய்வுகளில் நாடு பிரம்மாண்ட இடத்தை அடைந்ததற்கும் நேரு, டாக்டர் அம்பேத்கர் போன்ற மேதைகள் அமைத்த அடித்தளமே காரணம் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
கல்வி அமைப்பில் நிலவும் நீட் மற்றும் சிபிஎஸ்இ தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக போராடும் இளைஞர்களின் குரலுக்கு ஒன்றிய அரசு செவிமடுக்க வேண்டும். உழைக்கும் வர்க்கத்தைப் பாதிக்கும் 4 புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முற்றிலுமாக நிராகரிக்கிறது. கேரள அரசைப் போல, தமிழ்நாட்டிலும் இதனை அமல்படுத்த முடியாது என்று தமிழக முதல்வர் விஜய் அறிவிக்க வேண்டும். மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் செவிலியர்களின் நியாயமான ஊதியக் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.
வரும் 18ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடர், முதல் நிகழ்வாக தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட வேண்டும். தற்போதைய ஆளுநர் தமிழ் மக்களின் உணர்வுகளையும், சட்டமன்ற இறையாண்மையையும் எளிதாகக் கடந்து செல்ல முயலக் கூடாது. 5 ஏக்கர் வரையிலான சிறு, குறு விவசாயிகளின் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்; இதற்கு ஒன்றிய அரசு நிதி வழங்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையைச் சிதைக்க ஒன்றிய அரசு முயல்கிறது. இதில் தமிழக அரசு தங்கு தடையின்றி மிக உறுதியாக இருக்க வேண்டும்.
சென்னை, கோவை, திருப்பூர், கரூர் ஆகிய பகுதிகளில் மின்கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு தொழில்களைப் பாதுகாக்க முதல்வர் அந்த சங்கப் பிரதிநிதிகளை அழைத்து பேச வேண்டும். மேலும், கோவை, சென்னை, மதுரை ஆகிய நகரங்களின் மெட்ரோ ரயில் திட்டங்களுக்குரிய நிதியை வழங்கி, பணிகளை விரைந்து தொடங்க வேண்டும். இடதுசாரிகளும் ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து மக்களின் உரிமைகளுக்காகவும், மதச்சார்பின்மையைக் காக்கவும் தொடர்ந்து போராடுவோம்.
இதையும் படிங்க: “விஜய் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிது...” - தவெக அரசை கிழித்து தொங்கவிட்ட கீதா ஜீவன்...!!
தமிழகத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூடி, அப்போதைய சூழலுக்கு ஏற்ப தேர்தல் வியூகங்களை வகுக்கும். தற்போதைய சூழலில் காங்கிரஸ் விலகிவிட்டதாலும், இந்திய கூட்டணியில் இடம்பெற மாட்டோம் என திமுக அறிவித்துவிட்டதாலும், ஒரு கூட்டணியாக அமைந்து போட்டியிடும் சூழல் இங்கு இல்லை. எனவே, தற்போதைய நிலையில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று மு.வீரபாண்டியன் திட்டவட்டமாகத் தெரிவித்தார். எனினும், தங்களுக்கு ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக மட்டுமே அரசியல் பகை என்றும், மற்றபடி திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் ஆகிய அனைத்தையும் ஜனநாயக சக்திகளாகவே கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய அரசியல் சூழலில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் ஆட்சி அமைக்கும் சூழல் இல்லை. தமிழக மக்கள் 108 இடங்களை வழங்கி தவெக-வை ஆட்சி அமைக்கப் பணித்துள்ளனர். இந்த மக்கள் தீர்ப்பிற்கு மதிப்பளிக்க வேண்டியது அரசியல் கடமையாகும். பெரும்பான்மை பெற்ற தவெக-வை ஆட்சி அமைக்க அழைக்காமல் ஆளுநர் காலதாமதம் செய்வது அரசியல் காய்நகர்த்தலாகும். மக்கள் தீர்ப்பைத் தாண்டி ஆளுநர் தலையிடுவதைத் தடுக்கவும், மீண்டும் ஒரு தேர்தல் மக்கள் மீது திணிக்கப்படுவதைத் தவிர்க்கவுமே இ.கம்யூனிஸ்ட் வெளியிலிருந்து ஆதரவு அளிக்கிறது. வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதால் அரசின் தவறுகளை மூடி மறைப்போம் என்று பொருளல்ல. தவெக-வின் கொள்கை மற்றும் அணுகுமுறைகளைக் கண்காணித்து, நல்ல திட்டங்களை வரவேற்போம், தவறுகளை எதிர்ப்போம்.
கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் உட்கட்சி விவகாரங்களிலோ அல்லது தேர்தல் இடப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையின் போதோ கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவுகளில் அவர் ஒருபோதும் தலையிட்டதோ, அழுத்தங்கள் தந்ததோ இல்லை,. கம்யூனிஸ்ட் கட்சி என்பது சுதந்திரமாக விவாதித்து முடிவெடுக்கும் இயக்கம் என்பது அவருக்கும் தெரியும். எனவே, தற்போதைய சூழலில் அவர் அவ்வாறு பேசியிருக்கக் கூடாது என்று குறிப்பிட்டார்.
காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இல்லை, அதே நேரத்தில் இந்திய கூட்டணியில் நீடிக்க மாட்டோம் என்று திமுக-வும் அறிவித்துவிட்டது. இத்தகைய குழப்பமான தேர்தல் அணி சேர்க்கை சூழலில், திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நீடிப்பதற்கான அரசியல் சூழல் இல்லை என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம் என செய்தியாளர்களுக்குப் பதிலளித்தார். கம்யூனிஸ்ட் கட்சி யாருடைய தயவிலும் இயங்கும் இயக்கம் அல்ல. சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ இடம் கிடைக்காவிட்டாலும், உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகத் தெருக்களையே நாடாளுமன்றமாக்கி எங்கள் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும்,. எங்களின் ஒரே கொள்கைப் பகை ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தான். தேசத்தின் பன்முகத்தன்மையையும், மதச்சார்பின்மையையும் காக்கும் சமரசமற்ற கொள்கைப் போரில் இடதுசாரிகள் தொடர்ந்து களமாடுவோம்.

டெல்லியில் பிரதமரைச் சந்தித்த தற்போதைய தமிழக முதல்வர் விஜய் அவர்கள், அந்த சந்திப்பின் நோக்கம் மற்றும் விபரங்கள் குறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கமளிக்க வேண்டும் அல்லது அறிக்கை வெளியிட வேண்டும்,. ஊடகங்களும் பத்திரிகைகளும் ஜனநாயகத்தின் இன்றியமையாத தூண்கள். அவற்றைச் சந்தித்துப் பேசினால்தான் ஜனநாயகம் வளரும் என்று இ.கம்யூனிஸ்ட் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
புதிய அரசு தங்களது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கால அவகாசம் எடுத்துக் கொள்வதில் தவறில்லை. ஆனால், சட்டம்-ஒழுங்கைக் காப்பதில் எவ்வித கால அவகாசமும் எடுத்துக்கொள்ளக் கூடாது. குறிப்பாக, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களைத் தடுக்க உளவுத்துறையையும், காவல்துறையையும் முழு வீச்சில் முடுக்கிவிட வேண்டும். இதில் எவ்வித சமரசமும் செய்யக் கூடாது, இது நம் பண்பாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதல் என்பதால் ஒட்டுமொத்த சமூகமும் இதற்கு எதிராக முன்வர வேண்டும்.
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் டாஸ்மாக் மற்றும் இதர துறைகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் 160 கோடி ரூபாய் தனிநபர் நிதி விவகாரங்கள் குறித்துச் சட்டப்படி நடவடிக்கை எடுப்பது தவறல்ல. அதனை வரவேற்கிறோம். அதே நேரத்தில், ஆட்சிகள் மாறும் போது மேற்கொள்ளப்படும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை இ.கம்யூனிஸ்ட் ஆதரிக்காது. மேலும், டாஸ்மாக் தொழிலாளர்களின் நீண்டகாலக் கோரிக்கைகளை நிறைவேற்ற அவர்களின் சங்கப் பிரதிநிதிகளை அழைத்து அரசு பேச வேண்டும்.
தவெக தலைவர் விஜய், முந்தைய திமுக தலைமையிலான கூட்டணியைக் "கல்லாப்பெட்டி கூட்டணி" என்று விமர்சித்தது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்ட போது, கம்யூனிஸ்ட் இயக்கம் கடந்த 100 ஆண்டுகாலப் பாரம்பரியமிக்கது. நீதிமன்றங்களால் ஊழலுக்காகத் தண்டிக்கப்படாத, எந்தவொரு காவல் நிலையத்திலும் ஊழல் குற்றச்சாட்டு இல்லாத தூய்மையான பாரம்பரியம் எங்களுடையது, எனவே, எங்களை அத்தகைய வார்த்தைகளோடு ஒப்பிடக் கூடாது. புதிய தலைவர்கள் போகப்போக அரசியல் எதார்த்தங்களைக் கற்றுக் கொள்வார்கள் என்றார்.
தற்போதைய அரசியல் சூழலில், 1.75 கோடி மக்கள் வாக்களித்துப் பெரும்பான்மை பெற்றுத் தந்துள்ள தவெக அரசுக்கு, ஆளுநர் ஆட்சி திணிக்கப்படுவதைத் தடுக்கவே வெளியிலிருந்து ஆதரவு தருகிறோம். ஆனால், அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டத் தயங்க மாட்டோம்.
எதிர்வரும் உள்ளாட்சி, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களின் போது, அரசியல் நிகழ்ச்சிப் போக்குகளைக் கண்காணித்து, கட்சியின் மத்தியக் கமிட்டியின் வழிகாட்டுதலின்படி இடதுசாரி அணிகளோடு ஜனநாயக சக்திகளை இணைத்து புதிய கூட்டணிகள் குறித்து முடிவெடுப்போம்.
இதையும் படிங்க: விஜய் ரசிகை பாலியல் வன்கொடுமை..! உண்மையாகவே அக்கறை இருக்கா முதல்வரே.? விளாசிய உதயநிதி..!