தமிழ்நாடு முதலமைச்சரின் உருவத்தைப் போலியாகச் சித்தரித்து, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக இந்தி ஆடியோ இணைக்கப்பட்ட ஆபத்தான டீப் பேக் வீடியோக்களை முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் உலவவிட்டுப் பல மாநில மக்களிடம் கோடிக்கணக்கில் நிதி மோசடியில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியை, ராஜஸ்தான் மாநிலத்தின் உட்பகுதியில் புகுந்து தமிழ்நாடு சிபிசிஐடி சைபர் குற்றப்பிரிவு தனிப்படையினர் அதிரடியாகக் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்.
தமிழ்நாடு சிபிசிஐடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கமாக மேற்கொள்ளும் இணையவழி ரோந்து மற்றும் தீவிர கண்காணிப்புப் பணியின் போது, முகநூலில் ஒரு திடுக்கிடும் வீடியோ உலா வருவது கண்டறியப்பட்டது. அதில், தமிழ்நாடு முதலமைச்சர் பேசுவது போன்ற அதிநவீன டீப் பேக் காட்சிகளும், அதற்குப் பின்னணியில் இந்தி மொழியில் உருவாக்கப்பட்ட செயற்கை குரல்வடிவமும் கச்சிதமாக இணைக்கப்பட்டிருந்தன. அப்பாவி பொதுமக்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் உள்நோக்கத்தோடு பரப்பப்பட்ட அந்த வீடியோக்களில், அரசிடமிருந்து நேரடி நிதி உதவி பெற உடனடியாக இந்த குறிப்பிட்ட வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்பு கொள்ளவும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இச்சம்பவம் குறித்து சிபிசிஐடி சைபர் கிரைம் பிரிவு உடனடியாக வழக்குப்பதிவு செய்து கள விசாரணையில் இறங்கியது. விசாரணையில், இத்தகைய ஏஐ வீடியோக்களை சமூக வலைதளங்களில் விளம்பரமாகப் பரவவிட்டு, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அப்பாவிகளிடம் குறிப்பிட்ட கும்பல் பெருமளவில் பணம் பறித்து மோசடி செய்திருப்பது வெட்டவெளிச்சமானது. இதனையடுத்து, இணையச் சேவை நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் அந்த நச்சு வீடியோக்களை உடனடியாக நீக்கிய சிபிசிஐடி அதிகாரிகள், டிஜிட்டல் தடயங்கள், ஐபி முகவரிகள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகளைத் துல்லியமாக ஆய்வு செய்து குற்றவாளிகள் பதுங்கியிருந்த இடங்களை அடையாளம் கண்டனர்.
இதையும் படிங்க: ஆன்லைன் முதலீட்டு மோசடி..! கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டிய பகீர் பின்னணி.. காவல்துறை எச்சரிக்கை.!

இதனைத் தொடர்ந்து, டிஜிபி உத்தரவின் பேரில் ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களுக்கு இரண்டு தனிப்படைகள் மின்னல் வேகத்தில் விரைந்தன. அங்குள்ள உள்ளூர் மாநிலக் காவல்துறையின் முழு ஒத்துழைப்புடன் ஆல்வார் மாவட்டத்தின் தொலைதூர உட்பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில், முக்கியக் குற்றவாளியான ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம், லட்சுமண்கர் வட்டம், பூந்தோலி கிராமத்தைச் சேர்ந்த ஜஹூர் கானின் மகன் ஷயாபு கான் (28) என்பவரைப் போலீசார் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். அவரிடமிருந்து மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட அதிநவீன செல்போன்கள், போலி சிம் கார்டுகள் மற்றும் ஏஐ மென்பொருட்கள் அடங்கிய சிபியு உள்ளிட்ட மின்னணு சாதனங்களைப் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஷயாபு கானை பி.டி. வாரண்ட் மூலம் தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்த சிபிசிஐடி போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். மேலும், மத்தியப் பிரதேசத்தில் இந்த நபரிடம் ஏமாந்து லட்சங்களை இழந்த பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை அடையாளம் கண்ட தனிப்படையினர், அவரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலம் மற்றும் ஆதாரங்கள் மூலம் இவ்வழக்கை மிக வலுவாகக் கட்டமைத்துள்ளனர்.
இதனிடையே, தமிழக முதலமைச்சரின் இத்தகைய போலி டீப் பேக் வீடியோக்கள் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் சில முகநூல் கணக்குகளிலிருந்தும் திட்டமிட்டுப் பகிரப்பட்டு வருவது விசாரணையில் உறுதியாகியுள்ளது. இதன் பின்னணியில் சர்வதேச சைபர் கிரைம் மாஃபியா நெட்வொர்க் ஏதேனும் செயல்படுகிறதா என்பது குறித்தும், வெளிநாட்டு சதிகாரர்களுக்கு உள்ளூரில் உடந்தையாக இருந்த ஏஜெண்டுகள் யார் என்பது குறித்தும் தமிழ்நாடு சிபிசிஐடி சைபர் பிரிவு விரிவான சர்வதேச டிஜிட்டல் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உயர்கல்வியை வணிகமயமாக்கும் தனியார் பல்கலைக்கழக சட்டம்! ரத்து செய்ய சீமான் ஆவேச முழக்கம்!