சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி இராசேசுவரன் தலைமையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் கண்மதியனின் தேசிய நூல் பகவத் கீதையா? திருக்குறளா? உள்ளிட்ட மூன்று நூல்களைத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக வெற்றிக் கழக அரசின் முரண்பாடான செயல்பாடுகள், ஈரோடு பெரியார் ஊர்வல விவகாரம், புதிய தலைமைச் செயலக முயற்சி மற்றும் தமிழகத்தில் நிலவும் தொடர் மின்தடைப் பிரச்சினைகள் குறித்து மிகக் காரசாரமாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
தந்தை பெரியாரின் சொந்த ஊரான ஈரோட்டில் ஆண்டுதோறும் தவறாமல் நடத்தப்படும் ஊர்வலத்திற்கு காவல்துறை முதலில் அனுமதி மறுத்ததைக் கண்டித்த கி.வீரமணி, அவர்கள் மாலையில் ஊர்வலம் நடத்துகிறார்கள், நாங்கள் கேட்டது காலையில்; அப்படியிருந்தும் அனுமதி மறுக்கப்பட்டது என்ன நியாயம்? நாங்கள் நீதிமன்றம் செல்லத் தயாரானதும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்த பின்னரே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் கொள்கைத் தலைவர் பெரியார் என்று வாயளவில் சொல்லிவிட்டு, இன்னொரு பக்கம் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது முதல்வருக்குத் தெரியுமா அல்லது அதிகாரிகளின் ஆட்சி நடக்கிறதா? சட்டமன்றத்தில் எந்தக் கேள்விக்கும் முதலமைச்சர் நேரடியாகப் பதிலளிப்பதில்லை; முடிவுகளை அறிவித்துவிட்டுப் பின் வாங்குவதே வழக்கமாக உள்ளது என்று சாடினார்.

பட்டினப்பாக்கத்தில் அமையவுள்ள புதிய தலைமைச் செயலக விவகாரம் பற்றிக் குறிப்பிட்ட அவர், மாநிலத்தில் கடன் சுமை அதிகமாக இருப்பதாக ஒரு பக்கம் வெள்ளை அறிக்கை வெளியிடுகிறார்கள்; இன்னொரு பக்கம் புதிய சட்டமன்றம் அமைக்க வேண்டும் என்ற துடிப்பு எதற்கு? கிராமங்களில் 'குடிப்பது கூழ், கொப்பளிப்பது பன்னீரா' என்று சொல்வார்கள், அதுபோலவே அரசின் போக்கு உள்ளது. ஜோசியர் சொன்னார் என்பதற்காகக் கடற்கரையோரம் பாரம்பரியமாக வாழும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து, சுனாமி பாதிப்புக்குள்ளான அபாயகரமான இடத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது ஏற்புடையதல்ல. முதலமைச்சருக்கு ரூ.6 கோடியில் புதிய அறை அமைப்பதுதான் அரசு கடைப்பிடிக்கும் சிக்கன நடவடிக்கையா? முதல்வரின் லண்டன் பயணத்தில் ஈர்க்கப்பட்ட உண்மையான முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: 316 மாணவர்களின் இங்கிலாந்து கல்வி விசா விவகாரம்! தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க கி.வீரமணி அறிக்கை!
தமிழகத்தில் நிலவும் கடுமையான மின்தடை குறித்துப் பேசிய அவர், மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் உண்மைக்கு மாறான செய்திகளைப் பரப்பி வருகிறாரே தவிர, தனது துறையைச் சரியாகக் கவனிப்பதாகத் தெரியவில்லை. தமிழகத்தில் மின்வெட்டே இல்லை என்று சாதித்துக்கொண்டு, மற்ற அரசியல் வேலைகளைப் பார்த்து வருகிறார். தற்போது குறைந்த நேர மின்தடை போய் தொடர் மின்தடை ஏற்படும் அவலம் உருவாகியுள்ளது. மின்சாரத்துறை அமைச்சர் வீண் கற்பனைகளில் மிதப்பதையும், மிசா காலத்தில் மு.க.ஸ்டாலின் சிறை செல்லவே இல்லை எனப் பொய் பேசுவதையும் விடுத்து, முதலில் ஊரெங்கும் மின்சாரம் தடையின்றி எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எச்சரித்தார்.
இதையும் படிங்க: தவெக ஆட்சியில் தொடரும் மின்வெட்டு! நிர்வாக சீர்கேடு என நயினார் நாகேந்திரன் கண்டனம்!